cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 கவிதைகள்

யாழினி கவிதைகள்

யாழினி
Written by யாழினி

1.மொழி வனைதல்

தட்டெழுத்துப் பயிற்சிக்கூடத்தில்
யந்திரங்கள்
மொழியைக் கடித்துத் துப்ப

பயிலவந்த பெண்ணொருத்தி
காற்றில் சொற்களை
நளினமாய் வனைந்து காட்டுகிறாள்
அவளது தோழிக்கு

இருவரும் மாறி மாறி
வனைகையில்
அடிக்கடி சிரித்துக்கொள்கிறார்கள்

அப்பொழுதுதெல்லாம்
ஒரு சிற்றாறு கரை தளும்பும்
ஈரத்தின் சுவடை சுவாசிக்க நேர்கிறது

வாசனையற்ற பூவொன்று
கவனம் ஈர்த்த கணமது


2. காதல் பரிசு

கோடையில்
மழையின் வாசனையோடு
இளம் வெளிச்சம் அறிமுகமாகிறது
அதிகாலைத் தொடங்கி அந்தி வரையில்
ஒரே மாதிரியான வெளிச்சம்
கண்களைக் கூசச்செய்யாத வெளிச்சம்
கனவிலும் பூக்காத குளிர்ச்சியை
பூக்களும் இலைகளும் பூசிக்கொள்ள
இத்தனை அழகான நாளை
உனக்கே பரிசளிக்க விரும்புகின்றேன்
திகட்டுவதாய் உணர்த்திய அடையாளத்திற்குப் பிறகும்
என் அன்பை
குறைக்கத்தெரியவில்லை
இப்போதும்


3.பாலையைக் கடத்தல்

ஏகாந்தத்தை குழைத்துக் குழைத்து
தீட்டப்பட்ட வண்ணம்தான்
நினைவெனப்படுவது

எதன்பொருட்டும் தீராத காதலும்
கடந்துவிட்ட புள்ளியாய்
மலர்தலுக்குப் பின் பூ உதிர்கிறது
கருப்பு வெள்ளை நிழலாய்

அறிந்தே வைத்திருக்கிறோம்
அன்பின் சுமையை
கவனத்திற்கொள்ளக் கூடாதென

என்னை மீறி உனக்கான திசையும்
உனக்கடுத்தான எனக்கொரு வாசலும்
திறந்தே வைத்திருப்பதாய்
நம்பித்தொலைகிறோம்

அதற்கு முன்
இப் பாலையைக் கடந்தாக வேண்டும்.


கவிதைகள் வாசித்த குரல் : அன்புமணிவேல்

Listen On Spotify : 

About the author

யாழினி

யாழினி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website