cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 18 கவிதைகள்

மனோஹரி கவிதைகள்

மனோஹரி
Written by மனோஹரி

  • கண்ணாடி

முன்பைவிட அதிகமாய்
உரையாடுகிறாய்
அதிகம் சிரிக்கிறாய்
அழகிய கவிதைகள் படைக்கிறாய்
அதிக மகிழ்வாய் இருப்பதாய்
காட்சிப் படுத்துகிறாய்

வெகு எளிதாய் இயல்பு நிலைக்கு
மீண்டு விட நினைக்கிறாய்

நாளின் சுமைகளைக் கழற்றி விட்டு
பகலெல்லாம் அணிந்திருந்த
ஒப்பனையை இரவின்
கண்ணீரில் சுத்தமாகக் கழுவிக் கண்ணாடியில்
முகம் பார்க்கிறாய் ….

அடிப்பட்ட நாயின் அடங்கும்
கடைசித் துடிப்பிற்காய் காத்திருக்கும்
சவக்களை அப்பிக்கிடப்பது
அப்பட்டமாய் தெரிகிறது!

  • சிலுவை

கண்களால் கொஞ்சம்
உதடுகளால் கொஞ்சம்
விரல்களால் கொஞ்சம்
மனதால் மிச்சம் பேசி தீர்ந்து போனதா நேசம்.
தருவதற்கோ பெறுவதற்கோ ஏதும் இல்லை என்றானபோது
முகம் பார்க்க முடியாது
கூசி நிற்கிறது தேகம்..
முதுகோடு முதுகுரசி கைகள் பிணைத்த நாம்
நமக்கான சிலுவையைச் சுமந்து கொள்கிறோம்.
என் சிலுவை நீயாக
உன் சிலுவை நானாக
சிறகுதிர்த்த ஆசைகளை
அதில் அறைந்து கொள்(ல்)கிறோம்.


கவிதைகள் வாசித்த குரல் :  மனோஹரி

Listen On Spotify : 

About the author

மனோஹரி

மனோஹரி

மனோஹரி (மனோஹரி மதன்) ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் மற்றும் பி.எட்., பட்டம் பெற்றவராக இருந்தாலும்; தமிழ் மீது உள்ள காதலால் தமிழில் கவிதைகள் எழுதி வருகிறார்.கல்கி ,அவள் விகடன், இனிய உதயம், காணிநிலம் மற்றும் பல இணைய இதழ்களான வளரி, காற்றுவெளி, பட்டாம்பூச்சி, திண்ணை, கவிஓவியா ஆகியவற்றில் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன. இது வரை ஐந்து கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியிட்டுள்ளார். இவரது "சிறகில் விரியும் காடு" என்னும் கவிதை நூல் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுற்றுச்சூழலை பேணிக் காப்பதின் அவசியத்தையும் விழிப்புணர்வையும் படிப்பவர்களிடம் ஏற்படுத்தும் விதத்தில் எழுதப்பட்ட கவிதைகள். 2022 இலக்கிய மேடை
விருதைப் பெற்றது. தஞ்சையில் பிறந்த இவர் தற்போது வசிப்பது சென்னையில்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
சரஸ்வதி சுப்பையா

சிறப்பு. வாசிப்பதை விடவும் கேட்க எளிதாக புரிகிறது.

You cannot copy content of this Website