cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 18 கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்


  • வந்துவிடுவதற்கெல்லாம் முன்பாக..

 

தொடக்கத்தை கீழ்ப்படியில் வைத்து காத்திருந்தேன்

மெதுவாகத்தான் இறங்கி வந்தாய்

ஆனால்

கவனமாக தாண்டி போய்விட்டாய்

 

எந்த அவசரமும் இல்லை இந்த மதியத்தில்

நீ அறியாய்

இந்தக் கண்ணாடி சுவர்மீது நிழல் எதுவும் கடந்துவிடவில்லை

மனம் இசைக்க கூட இல்லை

சொற்கள் மொத்தமும் தீர்ந்து போய்விட்டன

 

வேறெங்கோ இதயத்தில் உருவாகிய புயல்

இங்கே மூச்சுக்காற்றை மொத்தமாக உறிஞ்சுகொண்டதில்

ஒரு நியாயம் இருக்கத்தானே வேண்டும்

 

லப்டப் என்கிற

அபத்தமான மொழிபெயர்ப்பை மட்டும் 

இப்போதும் புன்னகையாக்காதே

 

கவன ஈர்ப்பில்

சில்லிட மறந்த மொட்டைமாடித் தரையில்

சதுரம் சதுரமாக சிவந்து கிடக்கிறது

அத்தனை மௌனமும்

 

 

  • வனத்தில் ஏனோ ஓசைகள் இல்லை

 

இதுதான் வேட்டை என்று தெரிந்த பின்னும்

பசித்திருப்பாய் 

ஏன்

 

எலும்பு மஜ்ஜை ரத்தம் நாளம் ஒவ்வொன்றும்

புடைத்திருக்கும் காரணம் 

அறிந்திருக்கவில்லை

 

இதுவரை உன்மத்தம் கூடி ஏற்றம் இறக்கம் சுழன்றாடி

என்வசம் நானே இல்லை 

பார்

 

என் பித்தம் நாடி துண்டு துண்டாகி

நூறாயிரமாய் சிதைகிறேன் 

ஏன்

 

காலாதி காலம் பாதை தோறும் மாய்ந்து

வேறெங்கோ போயிருப்பாய் நீ

 

அகாலத்தின் நினைவுச் சுவரில் கிறுக்கிய தடங்களே இல்லாமல்

மீண்டு வந்து என்னில் மாய்

 

 

  • இன்னும் காலிங்பெல் அழுத்தப்படவில்லை

 

உன்னை ஞாபகப்படுத்தும் பொருட்களை எல்லாம்

தூக்கி எறிந்துவிட

அங்கொன்றும் இங்கொன்றுமாகவே தொடங்கினேன்

மெல்ல

 

எடுக்க எடுக்க ஒவ்வொன்றிலும் 

இருக்கிறாய் 

நீ

 

இந்த அறையின் உட்கூரையில்கூட நிழல் எனப் படிந்திருக்கிறாய்

படர்ந்து கடக்கின்ற வெயிலில் மின்னுகிறது

உனது புன்னகையின் நிறம்

 

அசையும் ஜன்னல் திரைச்சீலையில்

மடிந்து மடிந்து உயர்ந்து மீள்கிறாய் கொடுங்கனவென

கூகையின் வட்டக் கண்களைப் போல்

கருநீல வானில் இருந்தும் உற்றுப் பார்க்கிறாய்

 

எதிலாவதில் மிச்சம் இல்லாமல் இருக்கிறாயா

இல்லைவே இல்லை

 

இந்த இரவு வேளையில்

அறையைப் பூட்டி சாவியைக் கையில் வைத்திருக்கிறேன்

 

இந்த சாவியாக மட்டுமே எஞ்சி நிற்கிறேன்

 

 

  • அடுக்கடுக்காக நீங்கிக்கொள்ளலாம்

 

சென்றது வரை எல்லாம் ஓகே தான்

ஒரு சிறிய யூ-டர்னுக்கு மனம் வளையவில்லை

எனும்போது

 

கோப்பையில் சூடாக அலுங்கும் காஃபி புகையை

நுகரத்தான் வேண்டுமா

 

விட்டு விலகுவதில் அப்படியென்ன கசப்பு

அதுவொரு ஏற்பாடு என்கிற

கைக்குலுக்களை

எதிலாவது பத்திரப்படுத்தத் தான் வேண்டும்

 

ஞாபகத் தழும்புகளுக்காக உதடுகளை சுட்டுக்கொள்வதில் 

பிரயோஜனம் இருந்திருக்கிறதா

 

சொற்கள் மேலும் சொற்கள்

அவை 

அர்த்தமற்றவை

 

எதிர்பார்ப்பின் முனைதோறும்

சமயங்களில்

அர்த்தமுள்ளவையும்கூட

 


கவிதைகள் வாசித்த குரல் :   அன்பு மணிவேல்

Listen On Spotify : 

About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website