- மீனவனின் திசை
நள்ளிரவில்
தப்பி வந்தவனப்போல்
கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறது கடல் காற்று.
மீனவன் போடும் வலையை
அங்குமிங்கும் பாடி இழுத்து விளையாடுகிறது
குழந்தைமனம் கொண்ட கடல்.
இருக்கும் கடைசி சுண்டு அரிசியையும்
படக் படக்கென சுளகில்
புடைக்கிறாள் மீனவச்சீ.
மீன் வேட்டைக்குச் சென்றவனின் திசையையும்
தனக்கும் கொண்டு வரும்
மீன்களின் நித்திய ருசி
பெருத்த வலு வலுப்பான சொரசொரப்பான
உடலங்களை கண்ணை மூடிக் கொண்டு வாலை ஆட்டுகிறது
மீனவனின் மனதையும்
திசையையும் அறிந்த அவனின் நாய்.
மிக அமைதியாகவே இருக்கிறது இந்தக்காலை
இப்போது நீ ஆயத்தமாகிறாய்.
உன் வாழ்க்கையையும் சில சுவாரஸ்யமான காதலையும்
அழைத்துக்கொண்டு நீ புறப்படுகிறாய்.
“போய் வருகிறேன்” என்பதான
வார்த்தையில் மட்டும்
உதட்டுச் சாயத்தைப் பூசி இருக்கிறாய்
அவ்வளவுதான்.
ஒரு பிரிவின்
துயரத்தைக்
காலம் ஒரு கூர்வாளைக் கொண்டு
வெட்டுகின்றது.
வெறுமை வீட்டினுள்ளே
பூனையைப் போல் நுழைகிறது
அதிகாலையில் நீ போட்ட மயில் கோலத்தில்
இப்போது இரண்டு மயில்களைக்
காணவில்லை!!
நீண்டநாளைக்குப் பின்னால்
மதுவருந்துகிறேன்
மது
கோப்பையின் விளிம்புவரை நுரைத்து வழிகிறது.
ஓர்டர் பண்ணிய வண்ணமும்
சுவையும் செயற்கையும் மிக்க
உணவு பசியை முத்தமிடுகிறது.
மதுவில் இறங்கும்
ஐஸ் கட்டிகள் வெடிக்கின்றது
மதுவை முழுதும் தழுவி.
மெல்லிய இசையை ஆரம்பிப்பவன்
காயத்தில் மரியாளைப்போல்
தைலத்தை ஊற்றுகிறான்.
நுரைக்கும் குமிழிகள் வெடிக்க
நான் மலையுச்சியிலிருந்து
இறங்கிக்கொண்டிருக்கிறேன்
மனம் பறந்துகொண்டிருக்கிறது.