இப்போது பூனைகள் கூட எங்கள் வீட்டுக்கு வருவதில்லை.
மேலேயுள்ள வரிகளில் தனது வறுமையை கவிதை சொல்லி வெளிப்படுத்தியிருப்பதாக மனைவியிடம் கருத்துரைக்கிறேன்.
அவரின் வீட்டில் எலிகள் இல்லை போல அதனால்தான் வருவதில்லை போல என்கிறாள். எங்களின் இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த வீட்டு எலிகள் உடனே ஒன்று கூடி குறித்த கவிதை சொல்லியின் வீட்டைக் கண்டுபிடிப்பது பற்றி ஆலோசிக்கின்றன. எனது கற்பனையில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு எலியுடன் பேசிப் பார்க்கிறேன். அதுவும் உடன்படுகிறது. கற்பனையின் கன்னிகளைத் தளர்த்தி விடுவிக்கிறேன். அது நேராக எலிகளின் சபைக்குச் செல்கிறது. நம்ம எலி சும்மா ஆளா போராளிகளே புறப்படுங்கள் இந்தப் போராட்டத்தில் நாம் எல்லோரும் பங்கெடுத்தால்தான் வெற்றி நிச்சயம் என்று முழங்கி அனைத்து எலிகளையும் அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டைக் காலி செய்து கொண்டு புறப்படுகின்றன. ரத்தமின்றி யுத்தமின்றி சுத்திகரிக்கப்பட்ட எலிகளற்ற தேசத்தில் வாழ்வதான ஓர் அருட்டுணர்வு மெலிதாய் மனவெளியெங்கும் படர்கிறது. எனது எலியின் உரு கூட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழியத் தொடங்குகிறது.
கவிதை வாசித்த குரல் : ஃபஷ்றி
Listen On Spotify :