cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 19 கவிதைகள்

தேன்மொழி அசோக் கவிதைகள்


  • வீடு

இரு கால்கள் கொண்ட
அதிகாரக் குரல்களில்லாது
கால்களேயற்ற மணிப்பொறியின்
பேரிரைச்சலுமில்லாது
கனவிற்கு பெரும் விபத்தேதும் நிகழாமல்
வீடெனும் மாளிகையில்
என்னறையின் மந்திரக் கதவைத் திறந்து
விழிக்க வேண்டும் உறக்கம் துறந்து!

கைகளால் செய்கை காட்டி
கண்களால் சாடை சொல்லி
தெருவில் நிற்பது போலில்லாமல்
இரு நுரைக்குமிழிகள்
ஒன்றோடொன்று மோதி உடைவதைப்போல
நினைத்தவுடன்
நாமிருவரும் செல்லமாய் மோதிக்கொள்ள
நமக்கே நமக்கான
ஒரு சொந்த வீட்டைக் கட்டுவோமா?

ன் எண்ணங்களைத் தரைமட்டமாக்கி
எழுப்பிய சொந்த வீட்டில்
வாழ்வதென்பது
அடிமைச் சங்கிலி பூண்டு
எதிரி நாட்டு அரச மாளிகையில்
நடமாடும்
ராஜகுமாரியின் நிலையாயினும்
கிரீடமணிந்த ராஜகுமாரியாய்க்
கையில் வாளோடு
கம்பீரமாய் நடக்கப் பழக்கிவிடுகிறது
பாழாய்ப்போன இந்த சமூகம்.
சுவர்கள் மட்டுமே அறியும்
அவளின் ரெட்டை வேடத்தை!

குளித்து முடித்துப்
பதட்டமேதுமின்றி
பாத்ரூமிலிருந்து வெளிவந்து
அரைகுறை உடம்பை
முக்கால்வாசி வீடு பார்க்க நடந்து
உலர்த்த முடியா சூழலில்
எழும்பியிருப்பது
எங்ஙனம் சொந்த வீடாக அமையும்?


கவிதைகள் வாசித்த குரல்:
தேன்மொழி அசோக்
Listen On Spotify :

About the author

தேன்மொழி அசோக்

தேன்மொழி அசோக்

தேன்மொழி சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது கவிதைகள் சிங்கப்பூரின் தமிழ் முரசு,மக்கள் மனம்,மின்கிறுக்கல் மின்னிதழ் மற்றும் கவிமாலையின் ஆண்டுத் தொகுப்பிலும்,தமிழ் நாட்டின் வாசகசாலை இணைய இதழ் மற்றும் வளரி மாத இதழிலும் வெளியாகியிருக்கின்றன.கவிதைகளை வாசித்துக் குரல் பதிவு செய்வதிலும் ஆர்வம் மிகுந்தவர்.
சிங்கப்பூரின் ஒலி 96.8ல் இவரது கவிதை வாசிப்பு ஒலித்திருக்கிறது. சிங்கப்பூரின் தங்கமுனைப் போட்டியில் (2023) இவரின் கவிதைகள் மூன்றாவது பரிசை பெற்றிருக்கிறது.

இவரது கவிதை வாசிப்பினைக் கேட்க https://youtube.com/@user-mv9zg9ry6u .

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website