cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 19 கவிதைகள்

ஒளியைச் சேகரிப்பவள் !


திறந்துகிடக்கும் என் வீட்டிறப்பில்
சருவமும் உடைந்து காணப்படுகிறது
திவலை திவலையாய் முழுநிலவு !

வெற்றுக்கூடையில் பொறுக்கிப் பொறுக்கி
நிரப்பிக்கொண்டிருக்கிறாள் ஓரு பதின்மச் சிறுமி
சீக்கிரம் சேமித்து விடு, என் ரூபவதியே
அள்ளிருள் அச்சுறுத்துகிறது !

ஒள்ளொளியில் அவள் நயனங்கள்
ஓர் இசைக்கலைஞனிடமிருந்து
களவாடப்பட்டிருக்கவேண்டும்
அவ்வளவு சீக்கிரம் அவள் என்மேல்
பிரீதியாயிருப்பாளென்று நினைக்கவில்லை

வன்னிமரமும் வேங்கை மரமும்
கான்றை மரமும் அடர்ந்த வனத்திலிருந்து
தப்பித்துவந்த மதியின் சாகசம் புரிகிறது !
புகழ்பெற்ற உறைவிடமாகிறது என் வீட்டு முற்றம்.

அதற்கப்பாலுள்ள பிரபஞ்சம் கசடு நிறைந்தது !
அந்த வெண்ணிற நிலவுக்கு அதீத வெறுப்பு
அருவருப்பும் செத்த நெடியும் அகலாத அவலமும்…

ஒளியில் கரைந்து போகாத சிறுமகளே
நீ போய் நாளை கும்பிருட்டுக்கு முன் வா
நிலவு மீண்டும் சிதறும் !

நீ சேகரித்தவை வெள்ளித் துகள்கள் அல்ல
அத்தனையும் மனித இனம் பொறாமை கொள்ளும்
வெண்பொன் சித்திரங்கள் !
எந்த இசைக்கலைஞனும் புரிந்து கொள்ளாத
ஒப்பற்ற ஒளிர் முகங்கள் !


 

About the author

சந்திரா மனோகரன்

சந்திரா மனோகரன்

தமிழ்நாட்டிலுள்ள ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த சந்திரா மனோகரன் வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராக பணி புரிந்தவர். இதுவரை கவிதை , கதை , புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என 38 நூல்களை எழுதி உள்ளார். அண்மையில் 'அசையும் இருள் ' கவிதை நூலுக்கு தமிழ்நாடு அரசின் ' நற்றமிழ் பாவலர் விருது ' , தவிர , வெவ்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசுகள், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website