மழையையோ
இரவையோ எழுவதைப்போலத்தான்
இந்த கோடையை பற்றியும் எழுதப்போகிறேன்
ஆனால் ஒரு மழையிரவில்
காணாமல் போவதைப்போல கோடைக்குள் தொலைந்து போகமுடியவில்லை
அதன் வெம்மை கனன்றுக்கொண்டே
அழுத்தமான புழுக்கங்களை இறைக்கிறது
நாளைக்கான அத்தனை வேலைகளும்
இருக்கும் போது இன்றே களைப்படையவைக்கிறது.
கோடை……
மனதின் புழுக்கங்களை வாரிக்கொட்டவே சரியாக இருக்கிறது
களைப்படைந்த நாளொன்றில்
கடற்கரையை தேடி ஓடுவேன்
எல்லையை தொட்டுவிடாத
வானமும்
என் ஆறுதல் எதுவென தேடி தேடி
முத்தமிடும்
அலைகளும் அந்தியை ஒளித்து வைத்து விளையாடுகிறது
நான் இரவுகளை தேடுவதெல்லாம்
சிறகுகளை குறுக்கிகொண்டு
ஓய்வெடுக்கவோ
என் கூடுகளை கண்டு வீடடையவோ இல்லை….
எல்லா மனமுறிவுகளுக்கு பின்னரும்
கண்ணீரோடு என்னை நானே
கட்டியணைத்துக்கொள்ள…..
இரவுகள்
என்
அத்தனை வாழ்விற்கும் ஆசுவாசம்.