cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 20 கவிதைகள்

வானவில் வாசம்


இவளின் கனவுகள்
தூரதேசத்தின் வானவில்லாய் வளைந்து
இவளின் அருகேயும்
ஒரு வானத்தை வரைந்து கொண்டேயிருக்கிறது

எப்போதும் அவளை
வானதி என்று கூப்பிட
நண்பிகள் பலர் உண்டு

வானதியின் பிறந்தநாள் பரிசாக
அவளின் தோட்டத்தில் அன்று
நட்சத்திரங்கள் முளைத்து விட்டன

நட்சத்திரங்களைப் பறித்து
அள்ளிக் கொண்டு வரும்
ஒரு சிறுமிக்கு
வானதி
முத்தங்களை பரிசாக வழங்குகிறாள்

பரிசுகள் நிரம்பி வழியும் அறைக்கு
இவளின் வானவில்லையும்
அழைத்துச் சென்று காட்டுகிறாள்

அறை முழுவதும்
புத்தம் புதிய புத்தகங்கள்
நிரம்பி இருக்க

அவளின் கையெழுத்துப் பிரதியை
வாங்கிக் கொண்டு
விடைபெறுகிறது வானவில்

மொழி பெயர்ப்புக்காக
அடுத்த ஆண்டு
அவளை தயார் செய்கிறது
அறையின் வெளிச்சம்

கையெட்டும் தூரத்தில்
புத்தம் புதிய வாசனையோடு
அறையில் நிரம்பியிருக்கின்றன

வானவில் விட்டுப் போன நிறங்கள்.


கவிதைகள் வாசித்த குரல்:
ரோஸ்லின் அனிஷா
Listen On Spotify :

About the author

மஞ்சுளா

மஞ்சுளா

மதுரையை சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக பல இலக்கிய சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார்.

இதுவரை ஐந்து கவிதை தொகுதிகள் வெளிவந்துள்ளன.

மொழியின் வழியாக வாழ்வின் போதாமைகளை மாயங்களை, ரகசியங்களை, உடைத்து வெளிவரும் சொற்களையே தன் கவிதை வெளியில் மிதக்க விடுகிறார்.

“மொழியின் கதவு ” நூலுக்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது (2012), தமிழ் நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை( தேனி) வழங்கிய அசோக மித்திரன் நினைவு படைப்பூக்க விருது (2019) உள்ளிட்ட விருதுகளைத் தனது கவிதைகளுக்காக பெற்றுள்ளார். நவீன கவிதை குறித்த நூல் விமர்சனங்கள் செய்து வருகிறார்.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments

நன்று.நல்வாழ்த்துகள்

You cannot copy content of this Website