cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 21 கவிதைகள்

பா.மகாலட்சுமி கவிதைகள்


1

ன்றை வெறுப்பதற்கு முன்பாக

அதீத அன்பில் நேசிக்கப்பட்டிருக்கும்

மூழ்கடிக்கும் வெள்ளத்தின்

முதல் துளிபோல

 

ஒன்றைத் தொலைப்பதற்கு முன்பு

பத்திரமாய் பாதுகாக்கப்பட்டிருக்கும்

சிறகு முளைத்த பறவையின்

கூட்டிலிருந்த கணங்களாய்

 

ஒன்றை மறப்பதற்கு முன்னால்

ஞாபகப்படுத்தியே கிடந்திருக்கும்

அடை வைத்த கோழியின்

கதகதப்பான இருப்பை போல

 

ஒன்றை நிராகரிப்பதற்கு முன்பாக

ஒட்டிக்கிடந்திருக்கும் அதன் தேவை

அடர்ந்த மரம் தேடிப் பற்றிக்கிடக்கும்

சிறுகொடியின் ஆதரவாய்

 

ஒரு உறவைப் பிரிவதற்கு முன்பாக

உயிரெனச் சேர்ந்தே இருந்திருக்கும்

முலைக்காம்பை விட்டுப் பிரியாமல்

முட்டிக்கிடக்கும் குட்டிகளென

 

நம் உயிர் போவதற்கு முன்பாக

எல்லாருமே வாழ்ந்து கிடந்திருப்போம்

வேர்வை வாசமடிக்கும் முந்தானையில்

தாயன்பைப் பருகியபடி.

 

2

டித்தவுடன் கிழித்துவிடவும்

என்கிற வலியான நிபந்தனையோடே

முடிக்கப்படும் காதல் கடிதங்கள்

பெரும் காவியங்களாக வேண்டியவை

 

பூமத்திய ரேகையில் துடித்துக்கிடக்கும்

தன் காதலைச் சொல்லிவிட

பேனாவின் நாவும்

உயிர் உருகக் கசிந்துகொடுத்திருக்கும்

 

வானை வளைத்தும்

காற்றை நிரப்பியும் செய்த

ஒருகோடி வார்த்தைகளை

சல்லடை செய்தே எழுதப்பட்டிருக்கும்

 

நிகழ்காலத்தின்மேல் கட்டிமுடிக்கப்படுகிற

வருங்காலக் கனவுக்கூடு

தூக்கணாங்குருவிக் கூட்டையும்

தோற்கடித்திருக்கும்

 

சில காமமற்ற முத்தங்களும்

பிரிவில் வடித்த கண்ணீரும்

தபால்காரனிட்ட முத்திரையென

கடிதம் நிறைத்திருக்கும்

 

உயிர் வதங்க எழுதப்பட்ட

கடிதங்கள் அவரவர் மனவெளியில்

கிழிக்கப்படாமலேயே இருக்கும்

மஞ்சள் தடவிய கல்யாணப் பத்திரிக்கைபோல்.

 

3

  • ஆடையற்ற தேசம்

 

எப்போதும்

பொதுச் சபையில்தான்

துகிலுரியப்படுகிறாள் பாஞ்சாலி

ஒவ்வொரு முறையும் வரமுடியாதென

சலித்துக்கொள்கிறான் கிருஷ்ணன்

 

எப்போதும்

தீயிலிட்டுப் பொசுக்கப்படுகிறார்கள்

சீதைகள்

அநீதிகளுக்கு எதிராய்

ராமன்களின் ஆட்சேபமற்ற அரசவைகளில்

 

எப்போதும்

தப்பானவன்களை தலையிலேத்தி

தாசி வீட்டிற்கு அழைத்துச்செல்லவே

பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்

நளாயினிகள்

 

எப்போதும்

கல்லாகவே இருக்கும் இறைவிகளல்ல

ரத்தமும் சதையுமான

உறுப்புகளோடு பிறந்த

பாவப்பட்ட மனுசிகள் இவர்கள்

 

எப்போதும்

வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பீர்கள்

இப்போது நிர்வாணத்தில் கை வைத்து

சாட்சியம் அளிக்கிறீர்கள்

கறைபடிந்த உங்கள் கைரேகையால்

 

எப்போதும்

முதுகெலும்பு நொறுங்க நடக்கும்

வன்புணர்வை விட வலிக்கிறது

ஜனநாயகத்தின் ஆடை கிழித்து

நடந்த அம்மண ஊர்வலத்தில்.


About the author

பா.மகாலட்சுமி

பா.மகாலட்சுமி

மதுரையை சார்ந்த பா.மகாலட்சுமி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்& கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டக் குழுவிலுள்ளார். இதுவரை இவரின் இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

1. குளத்தில் மிதக்கும் சிறகு,
2. கூழாங்கற்கள் உருண்ட காலம்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website