cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 22 கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்


  • மீன்கள் மேயும் விரலிடுக்கு

எங்கோ ஆழத்தில் பிரபஞ்ச தவிப்புடன்
முகிழும் அன்பின் மையம்
கருக்கொண்டிருப்பது ஒரு கேலக்ஸியை

முன்னும் பின்னுமாக அசையும் மனதை
உரசி பறக்கிறது
காலமெனும் விண்மீன்

புதிய வனங்களை உற்பத்தி செய்திட சிறகசைத்து
துடிக்கத் துடிக்க உதிரும் மகரந்த தூள்களில்
மருத மரங்கள் கிளை நீட்டும் நதியோர மணலில்
குறுகுறுவென பூத்துவிடுகிறது
நாணம்

ஈர்ப்புடன் தொடும் தருணங்களை சிலிர்த்திடச் செய்ய
போதுமானதாயில்லை
ஐம்புலன்கள்

  • கையருகே எரிதழல்

தனிமைக்குள்ளிருந்து நீங்கிடத் தயங்கும் சொற்கூட்டங்கள்
தம் நிறமழிந்து மௌனிக்கின்றன
விரல்முனை தவிப்பில் குலையும் நினைவடுக்கின்
சிறு கதவு
மூடிக்கொள்ளும்போது

காத்திருக்கத்தான் வேண்டியதாகிறது
என் இருள் தின்ன மூச்சுத்திணறும் ஒரு டிராகனுக்காக

உணர்வுக்குரிய இச்சைகள் புதிய வாக்குறுதிகளை
இழக்கும்போதெல்லாம்
முதுகில் நெளியும் டாட்டூவாகிறது
காமம்

  • இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும்..

பரஸ்பரம் நம்மிடையே ஆயிரம் வாதங்கள்
புரிந்துவிட்ட நிலையில்
புதிதாக சலித்துக்கொள்ள ஒன்றுமில்லை

பற்றிக்கொண்ட கைகளை உதறிக்கொள்வதற்கான
நற்காரணங்களை பத்திரப்படுத்தி
வந்திருக்கிறோம்

மீள் உருவாக்கம் என்கிற பேச்சுக்கு இடமில்லை
என்றாகிவிட்ட பிறகு
தவிப்பின் கிளையில் அமர்ந்து காகங்கள் கரைவது
சரியல்ல

குயில் பாடுவதற்கான பிரபஞ்சத்தை
அடைகாத்திட சமைக்கும் கூடு
மௌனம்தான்

  • நுனி முடிச்சு

நான் அப்போதும் அங்கிருந்தேன்
ஒவ்வொரு வருகையின்போது மிச்சமாகும் நொடிகளாக
காத்திருந்தேன்

கண்ணாடி ஜன்னல் வழியே பாய்ந்து
தரையில் வீழ்ந்து கிடக்கும் வெயிலின் சடலத்தின் மீது
நின்றிருந்தேன்

ஹால் நெடுக அத்தனை வரிசைகளிலும்
மனிதத் தலைகள் வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்த
உரையின் வீச்சில் நானிருந்தேன்

தாமதமாக அர்த்தம் இழக்கும் சொற்களின் தயவை வேண்டி
பரபரத்த மூளையின் மடிப்பில்
ரத்தக் கசிவென பரவிக் கொண்டிருந்தேன்

அசௌகரிய நிமிடங்களின் இதயத் துடிப்பில்
நாளங்களின் பாதைகள் குழம்பிடும் பயணமாகி
கொழுப்புக் கசடுகளாக
நீக்கமற நிரம்பியிருக்கிறேன்

ஓர் இறுக்கத்தின் குரல்வளையில்
புடைத்துக்கொண்டு உடைய வேண்டியது
நான் மட்டுமல்ல

நீயும்தான்


கவிதைகள் வாசித்த குரல்:
ரேவா
Listen On Spotify :

About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website