சரும மிளிர்வு
சுடும் குருதி
வாடா முகம் வளையும் யாக்கை
யாவும்
தேய்ந்து அழிந்து போகவிட்ட
வழக்கமான
அழுத்தத்தில்
உணர்வுகளைப்
புரட்டிக் கொண்டு
அழத் தயாராய் இருக்கும் கணங்களில் உடைப்பில்லை
இருண்டு இறுகச் செய்யும்
வலியை
ஆராய்ந்தே ஒரு வாழ்வு
முடிந்து கொள்கிறது
பொய் களைந்து
உண்மைத் தழுவி
நற் குறியேற்று நயம்பட
திரு முழுக்காட்டி
நிறைந்து
படிந்து
காலங்காலமான
கரிமமாக
விழியோரத் துளி
மிளிரும் நாளெண்ணியே
கரைந்து தொலையும் மனதைக் கையாள்வதெப்படி
மழைக்காலப் பின்னிரவில்
ஈரமாகியிருந்த இருளை
உலர்த்திக் கொண்டிருந்த நிலா
தனித்திருக்கும்
அடுக்ககங்கள் விடும்
உஷ்ண மூச்சினை
எதிர் கொள்ள இயலாமல் வியர்த்திருந்தது
பக்கத்துக் கட்டிடத்தின்
பலகணி கூண்டிலிருந்து
கீச்சொலி
காற்று நிரம்பிய போத்தலை
ஆறாத கூழாங்கற்கள் கொண்டு நிரப்பிக் கொண்டிருந்தேன்
ஆளரவமற்ற வாசலில்
காவலாளியின் சீழ்க்கையொலி
ஓடுடைத்து வெளிவந்த
சிறு பறவை
பிளந்த வாயின் இளஞ்
செந்நிறமாக நுனி சிவந்து
கனிந்து தவித்த பொழுது,
காமத்தின் நிழலில்
தஞ்சமடையாது
பறந்துவிட்ட
இரவின் எச்சமென
பகலில் முளை விடுகிறது