cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கவிதைகள்

நந்தாகுமாரன் கவிதைகள்


  • மகா எதிர்கவிதை

தூக்கமின்மை போக்கும் இசையைக்

கேட்கத் துவங்கும் முன்

ஒரு எதிர்கவிதையின்

சாமுத்ரிகா அவலட்சணங்கள் குறித்து வரும்

இந்த விளம்பரம் பார்க்க நேரிடுகிறது

உங்களுக்கு

 

நிச்சயம் இந்த எழுத்து

போலி தான்

அவ்வளவு இயல்பானதாக இருந்தால்

தானே உருவாகியிருக்க வேண்டும் இது

யாரும் சொல்லாமலே

எதுவும் செய்யாமலே

வீட்டுத் தோட்டத்தில் விரிந்து பொலியும்

இந்தக்காட்டுத் தீச்சுடர்மலர்கள்* போலே

 

தேர்வுக்கு வந்து

நிரம்பி வழியும் பக்கங்களிலிருந்து

உங்கள் படைப்பை நிராகரிக்கிறார்

பத்திரிக்கை ஆசிரியர்

அது வந்து விழுகின்றது

உங்கள் குப்பைத் தொட்டியில்

நல்ல வேளை

பலர் வீட்டுக் குப்பைத் தொட்டிகளை

அவர் காப்பாற்றினார்

 

ஒவ்வொரு முறையும்

ஆணுறையை தலைகீழாக அணிந்து

பின் சுதாரித்துச் சரி செய்து

மாற்றிக் கொள்கிறான் அவன்

பெண்ணுறையை அணிந்துகொள்ள

எப்போதும் மறுக்கிறாள் அவள்

நீங்களோ மது அருந்துவதை நிறுத்திவிட்டதால்

மாசாவாங்கிக் குடிக்கிறீர்கள்

 

கறிக்கடைக் கோழிகள்

இன்னும் உறங்கிக் கொண்டிருக்கின்றன

செல்லப் பிராணிகளின் கூண்டுகளுக்குள்

அதிகாலை கசங்கத் தொடங்குகிறது

ஞாயிறு போற்றுதும் என்று

அகஸ்மத்தாகச் சொல்லி வைக்கிறீர்கள்

*  – ‘காட்டுத் தீச்சுடர்மலர்கள்பலாசு / புரசு – Flame of the Forest


  • பழக்கப்படுத்தப்பட்ட சொற்களும் வளர்ப்பு வார்த்தைகளும்

நீங்கள் இப்போது

பழக்கப்படுத்தப்பட்ட சொற்களுடன்

பழகத் தொடங்குகிறீர்கள்

உரையாட உரையாட

உங்களுக்கும் இந்தஅரட்டை இயலி’-க்கும்*

வித்தியாசம் இல்லாமல் போகிறது

 

உங்களுக்கு இப்போது கவிதை எழுதத் தெரியும்

                                    கதை எழுதத் தெரியும்

                                    ஓவியம் வரையத் தெரியும்

                                    இசையமைக்கத் தெரியும்

                                    ஒளிப்படம் எடுக்கத் தெரியும்

                                    காணொளிப் படம் உருவாக்கத் தெரியும்

                                    கணினி மென்பொருள் நிரலாக்கம் தெரியும்

உங்களுக்கு இப்போது ஏறக்குறைய எல்லாம் தெரியும்

உங்கள் வளர்ப்பு வார்த்தைகள்**

உங்களை வளர்த்தெடுக்கின்றன

 

எப்போதும் பல்லண்டத்தின் பரவெளியில்

வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள்

இதற்கெல்லாம் என்ன அர்த்தம்

என்றெல்லாம் கேட்பதில்லை

யோசிக்கும் இன்பத்தை விட

வாசிக்கும் இன்பம் முக்கியம்

உங்களுக்கு


* – ‘அரட்டை இயலி’ – chatbot

** – வளர்ப்பு வார்த்தைகள் – prompts

*** – பல்லண்டம் – metaverse


கவிதைகள் வாசித்த குரல்:
பாபு சுந்தரம்
Listen On Spotify :

 

About the author

நந்தாகுமாரன்

நந்தாகுமாரன்

பெங்களூருவிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் கணினித் துறையில் பணிபுரியும் கவிஞர் நந்தாகுமாரன் பிறந்த ஊர் கோவை. இலக்கியம், ஓவியம், ஒளிப்படம் போன்ற கலைத்துறையில் ஆர்வமுள்ள இவர், ‘மைனஸ் ஒன்’ ( உயிர்மை வெளியீடு - 2012), பாழ் வட்டம் ( காலச்சுவடு பதிப்பகம் -2021) உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும், மின்னூல் பதிப்பாக ‘நான் அல்லது நான்’ சிறுகதைத் தொகுப்பு நூல், ‘ கலக லகரி’ ( கவிஞர் பெருந்தேவியின் எதிர்கவிதைகள் முன்வைத்து எழுதப்பட்ட ரசனை பதிவுகள்) உள்ளிட்ட நூல்கள் வெளியாகி உள்ளன. ஹைக்கூ வகை கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுடைய நந்தாகுமாரன் அயல் மொழிகளிலுள்ள கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து அளித்தது கவனத்திற்குரியது. பயணம் சார்ந்த புனைவுகளை எழுதும் ஆர்வமுடைய இவர் தற்போது ‘ரோம் செல்லும் சாலை’ எனும் புனைவு நூலை எழுதி வருகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website