ஆகாசமான உனது
பிரியங்களில் நான்
மகிழ்ந்திருக்கிறேன்.
எனக்காக விண்மீன்களை
நீ பிடித்துத் தரும்
அப்பொழுதுகளே மிகவும்
ரசனையானவை.
உனது நினைவாலேயே
எனதுள்ளம் சல்லடைகளில்
நுழைந்து விடுகிறது.
உன் மீதான
பித்துநிலையே
விருப்பமாய்
இன்புற்றுக் களித்திருக்கிறேன்.
ஒவ்வோர் செல்களிலும்
அப்பியிருக்கும் உன்மீதான
ஆத்மக்காதலை நான்
ஆனந்தித்திருக்கிறேன்.
எனது
வாலிபங்களை
உடைத்தெறிகிறேன்.
என்னின்
இச்சொற்ப காலங்களின்
பிம்பமானவனாய்
நீயே நிறைந்திருக்கிறாய்.
அந்திமப்பொழுதுகளின்
இறப்பு நேரங்களை
விரலிடுக்கில்
நழுவ விடும் சமயம்
உன் ஞாபங்களையே
சுமந்திருக்கும்
என் இருதயம்.
பளிங்கு சிலையின்
மேனியில்
ஆங்காங்கு
கையெழுத்து கிறுக்கல்கள்.
நேர்க்கோடுகளுக்கு
வாய்த்த பெரும் துயரான
இடுக்குகளில்
வளைக்கோட்டுப் புண்கள்.
கூரை சரிவில்
அங்குலம் பதிந்த
மோட்டுவளை
பொத்தல்கள்.
இவையெல்லாம் கடந்த
இமாலய மேடுகளில்,
நங்கூரம் பாய்ச்சி நிற்கும்
பயணிக்கப்பலின் அடிப்பகுதியில்
கடல்நீர் வழிய
மிதக்கிறது
கருணையோடியைந்த
அன்பு பொத்தல்கள்..
இந்த
மனமுதிர்வு
வெள்ளந்தித் தனத்தை அடக்கி,
மிகுந்த அடர்த்தியாய்
நீள்கிறது.
இந்த
மனமுதிர்வு
தவறை சகிக்க மறுக்கிறது.
இந்த
மனமுதிர்வு
யதார்த்தங்களே இல்லை
என்கிறது.
இந்த
மனமுதிர்வு
எப்போதும்
அச்சமூட்டுகிறது.
இந்த
மனமுதிர்வு
தேவைகளை
சுருக்குகிறது.
இந்த
மனமுதிர்வு
சிரிக்க மறந்து
உடலை இறுக்குகிறது.
இந்த
மனமுதிர்வு
காமத்தை
தள்ளிவைக்கிறது..
தலைக்கு மேல் பித்து வெடிக்கும் நாளின்,
நடுப்பகல் வேளையது.
துயரின் மதுரம்
கூடுதலாய் ஒரு துளி
கசியும் சொல்லைக்கொண்டு
குழியைப் பறிக்கிறாய்.
நாவறுந்துத் துடிக்கும் தரையைப் போல்
அழுந்தக் கிடக்கும் கவிதை நான்
தலைவிரி கோலமாய் நீளும்
நட்சத்திரப் பாதையின் முடிவில்
அரூபமாய் தோன்றும் சிறுபிராயத்தின்
நினைவுகளோடு புதையும்,
உன்னோடு என்னை பூனைமுடியோடு இறுகப் பிணைக்கும்
இந்தத் தாளின் இறுதியில்
நிறைவடைகிறது
இப்படிக்கு அன்புடன் என்கிற
இக்கடிதம்.