புத்தகத்திற்குள் வைத்தால்
குட்டிபோடும் மயிலிறகு என்று
திறந்து பார்க்கும்
ரகசியம் போலத்தான் என் புதிய வயதிற்குள்
எட்டிப்பார்க்கிறேன்
அந்தி மஞ்சளை விழுங்கிக் கொள்ளும்
கரிய இருள்போல
அடுத்தடுத்த
சுவாரசியங்களை ஒளித்து வைத்திருக்கும் வாழ்க்கைக்குள் வழமைபோலவே
தள்ளப்படுகிறேன்
வயதென்பது ஒரு எண்
மற்றபடி
இன்னமும் எனக்கு
பொன்வண்டு பிடிக்கும் பால்யத்தின்
வயதுதான்
இன்னமும் தட்டிக்கொடுத்தால்
உறங்கும் குழந்தை மனதுதான்…
*****
நான் பள்ளத்தாக்கில்
மலர்ந்த பூ
கோபத்தின் ஒரு சுடர்.
நெருங்க மறுக்கும் ஒரு தூரம்.
அது
முறிந்த மரமென்றாலும்
பரவாயில்லை.
எனக்கு கொஞ்சம் நிழல் கொடு
என்பது போல இருக்கிறது…
*****
எனது பெயரில் அழைக்கும் போது
அன்னியத்தை உணர்கிறேன்.
அது நானில்லையோ என்று
அச்சம் விழைகிறது.
குரலொன்று மரித்தபிறகு
எங்குப் போய்விடுகின்றன
அந்த இரண்டாவது பெயர்கள்?
என்றுமில்லாதவாறு இந்த அதிகாலையில்
சிதறிய மனதை ஒன்றுசேர்க்க
பெரும்பாடுபடுகிறேன்.