ஒரு சிறுகுழந்தையைப் போன்று
அத்தனை களைப்புடன் உறங்குகிற
உனது மூச்சொலியின் தியானத்திற்குள்
மௌனமாகக் காத்திருந்தேன்.
பதுங்கி மீண்டும் திமிறும்
உனது சீரற்ற சுவாசத்திலிருந்து
ஒவ்வொரு கணமும்
என்னைக் கண்டுகொள்கிறேன்.
நீ சிரமப்பட்டு உறங்க வைத்திருக்கும்
உனது கோரமான சிறுமிருகத்தின்
கேவலொலி சன்னமாகக் கேட்கிறது
உனது மூச்சின் உச்சத்தில்.
விளிம்பில் சுருங்கி
சின்னஞ்சிறு கால்களை
வெளியேற்றிவிடும்
தொட்டில் கைலியைப் போல
நேர்மையற்ற உறக்கம்
உனது புலம்பல்களிலிருந்து
சில வார்த்தைகளைத் தவறவிடுகிறது.
காட்டு யானையின்
வயிறாக மாறி அசையும்
உனது மூச்சின் பெருந்தருணங்களில்
ஒரு வனமும் சில காட்சிகளும்
சப்தங்களாக மாறி ஒலிக்கின்றன.
அத்தனை ஒழுக்கத்துடன்
பெருஞ்சத்தமெழுப்பாமல்
மௌனமாக விசில் அடிக்கும்
உனது சிறுமித்தனத்தை
வேடிக்கையாகப் பார்க்கிறேன்.
உன் மூச்சு ஆடும்
கௌரவ நடனத்தின்
மொத்த நாடகமும் ஓயும்வரை
என் இரவு
பிரகாசத்துடன் மின்னுகிறது.
கவிதைகள் வாசித்த குரல்:
கே.பாலமுருகன்
Listen On Spotify :
Subscribe
0 Comments