cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 28 கவிதைகள்

ராஜேஷ் வைரபாண்டியன் கவிதைகள்


  • மழைவழிப்பயணம்

அவர்கள் மழைப்பாதையில் பயணித்து
இங்கே வந்திருக்கிறார்கள்.
மொத்தம் மூன்று பேர்.
சிறுமி,
நாய்க்குட்டி,
சிறுமியின் குடுவை மீன்.
ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள்
நாங்கள் என்கிறாள் அச்சிறுமி.
மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்
எதற்காக இவ்வருகை என்பதை
அறியும் முன் சிறுமியும் நாய்க்குட்டியும்
அடுத்த நூற்றாண்டிற்குள் நுழைந்துவிட்டார்கள்.
அழுக்கற்ற அன்பைத் தேடி இப்பயணம்
என்றது குடுவை மீன்.
முடிவற்ற பயணமிது என்றபடி தவறவிட்டேன்
குடுவையை.


  • திடீரென்று

திடீரென்று யாருடனாவது
பேசலாம் எனத் தோன்றும்போது
அந்த‌ யாருடன் என்பது
யாரெனத் தெரிவதில்லை.
திடீரென்று எதற்காகவாவது
அழுதுவிடலாம் எனும்போது
கண்ணீர் உறைந்து போகிறது.
திடீரென்று முத்தமிடலாம்
எனத் தோன்றும்போதும்
ஒரு நத்தைக்கூட்டைப் போல‌
இதழ்கள் உள்ளிழுத்துக்கொள்கின்றன.
திடீரென்று பின்னிரவில்
அலைபேசி வழியே
முகநூலுக்குள் நுழைந்து
எதற்கென்றே தெரியாமல் ஸ்வைப்
செய்து சோர்கின்றன‌
விரல்கள்.
திடீரென்று பூத்த‌
ஓர் புன்னகைக்கு
மறுநகை செய்ய முயலும் முன்
காணாமலாகின்றன புன்னகைகள்
திடீரென்று உறக்கம் உதறி
எழுந்து பார்க்கையில்
இவ்வுலகம் யாரோ ஒருவரின்
திடீர்க் கனவு எனத் தோன்றுகிறது.
திடீரென்று இக்கணம்
மனதெங்கும் வந்தமர்கிறது
மலரொன்றின் ஆழ்ந்த அமைதி


Listen On Spotify :

குறிப்பு :
  இக்கவிதைகள்  47-ஆவது புத்தகக் காட்சியை முன்னிட்டு ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற்ற ”நவீனக் கவிதைகள் வாசிப்புக் கூடுகை” நிகழ்வில் வாசிக்கப்பட்டவையாகும்.  நுட்பம் – கவிதை இணைய இதழுக்காக எழுத்து மற்றும் ஒலிவடிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Courtesy :
கவிதைகள் ஒலி மூலம் : Shruti TV 

About the author

ராஜேஷ் வைரபாண்டியன்

ராஜேஷ் வைரபாண்டியன்

ராஜேஷ் வைரபாண்டியன் தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். ‘நிலாரசிகன்’ என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சிறார் நாவல், ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.
இவரது வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்புக்கான சுஜாதா விருதும், பிரமிள் விருதும் பெற்றது. ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். 361 டிகிரி, உதிரிகள் என இரு சிற்றிதழ்களின் ஆசிரியராகவும் உள்ளார்.

வலைத்தளம்: www.rajeshvairapandian.com

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website