-
இடர் அடக்கல் இசக்கிக்கும் சாத்தியமில்லை
கூட்டத்தினை
விழாக் கூடத்தினை
கண்களால் துழாவிப்
பின் அலசி ஆராய்ந்து
ஆண்களைத் தவிர்த்து
சக பெண்களை
அவர்களின் இருப்பை
நிச்சயப்படுத்திக் கொண்டு
சீக்கிரம் வந்திருந்தால்
எங்கே தான் இருக்கிறது
எனக் கலந்திருக்கலாமோ
என்றெல்லாம் யோசித்து
உயர்ந்தோர் என்றாலும்
ஆண்களைத் திரும்பவும்
தவிர்த்துத் தவிர்த்துத்
தோதான
பணி செய்யும்
பெண்கள் யாரும்
இல்லையென்றான பின்னே
பர பரவெனப்
பம்பரமாய்ச் சுழலும்
கனிவு கண்களில் மின்னும்
நயமான
ஒரு ஆணிடத்தில்
சத்தம் எழாதவாறு
மெதுவே கேட்கிறாள்
இசக்கி.
‘ஓய்வறை’ எங்கிருக்கிறது ?
வழி கேட்டுப் பின்
கண்டுபிடித்து
கழிப்பறை பீங்கானில்
அவசரமாய்க் குத்த வைக்கையில்
வெட்டவெளியில்
‘ஒன்றுக்கி’ருப்பதைப் போலவே இருக்கிறதாம்
அவளுக்கும்.
-
நிமிர்த்த முடியா ஒன்றின் வால்
அன்பிற்காய் ஏங்கும்
அபூர்வ உயிரி
என்னென்ன செய்யும்
பக்கத்தில் பக்கத்தில்
வந்து ஏக்கத்தோடு
கண் நோக்கும்
தன் விசுவாசத்திற்கு
வாலாட்டும்
சுற்றிச் சுற்றி வரும்
ஒரு கோணல் சிரிப்புடன்
கல் எடுக்கப்படும் போதும்
வாலைக் குழைத்து
ஊ ஊ ஊ சொல்லும்
புறக்கணிப்பில் ஆனது
வலி, கல்லால் அல்ல
என்றுணரும் நொடியில்
தேட முடியா
திசையொன்றில்
காதெட்டும் தூரத்தில்
கச்சிதமாய்
ஒளிந்து கொள்ளும்.
-
குட்டிக் கொடை
ஒவ்வொரு
குட்டி ஊரிலும்
முதலில் பிகு பண்ணிப் பின் கிழிசலைத்
தைத்துத் தரும்
ஊர்த் தையல்காரனொருவன்
இருக்கிறான்.
கொடை தான் வேண்டுமென்று
முன் கேட்டு
பின் பனம்பழம் மேல்
ஏற்றும் சூடம் போதுமென
இரங்குமோர் ஊர்ச் சிறுதெய்வம் போல.