cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 28 கவிதைகள்

வேல் கண்ணன் கவிதைகள்


மேலே சொருகும் பசியின் கண்கள்
நடுப்பகல் வெக்கையில் ஊடாடிச் சோர்வுறுகின்றன.
வாசல் கதவுகள் அகலத் திறந்த நிலையில்
கூடத்தில் பாய்ந்த வெளிச்சம்
குவிக்கப்பட்ட அழுகல்களைக் காட்சிப்படுத்துகிறது.
தோற்ற மாயை தருவிக்கும் தருணங்களின் எண்ணிக்கை
அதிகமாகிறது.
வார்த்தைகளைப் புறந்தள்ளி
அனுதாபங்கள் கரைக்கும்
ஒரு பார்வை தந்து விட முடியும்
சில தெருக்கள் கடந்து
மரத்தில் மிச்சமிருக்கும்
இலை ஒன்று உதிர்கின்றது
நீயிருக்கும் திசை நோக்கி

****

விடைபெறாதது குறித்தெல்லாம் வருத்தப்படத் தேவையில்லை
ஈமச்சடங்குகளில் குழப்பங்கள் இருக்கப் போவதில்லை
சிதையின் சாம்பல் காற்று கரைக்கும்
மிச்சமான எலும்புத் துண்டுகள் அவசரமாய்
அப்புறப்படுத்தப்படும்
நிலுவைத் தொகையையும் மீதமிருந்தவற்றையும்
என்ன செய்வதென்று அறிந்திருப்பீர்கள்
குறிப்பாக இறப்புச் சான்றிதழ்.
தாழ்மையான ஒரே ஒரு வேண்டுகோள்:
இறந்தவரின் அலைபேசியில் சேமிக்கப்பட்ட
எல்லா எண்களையும்
சோதித்துவிடுங்கள்
குறைந்த பட்சம்

****

  • மிக நீண்ட தூரம்

விருப்பக்குறியும் நிலைத்தகவலும்
இருத்தலைத் தெரிவிக்கும்
காலமிது
இறப்பில் தொடங்கி
இறப்பில் முடியும்
இந்நாட்களைக் கடப்பதற்கு
கள்ளச்சாவி ஏதேனும் உண்டோ?
எங்கெனவும் இருக்கும் காற்று
நிரப்ப முடியாத பிடிமூச்சு
எண்சாண் உடம்புக்கு நுரையீரலே பிரதானம்
காற்றின் உருவம் என்னுயிர்
இவ்வுலகின் மிக நீண்ட தூரம்
மூக்கிலிருந்து நெஞ்சாங்குழி வரை


Listen On Spotify :

குறிப்பு :
  இக்கவிதைகள்  47-ஆவது புத்தகக் காட்சியை முன்னிட்டு ஜனவரி 17-ஆம் தேதி நடைபெற்ற ”நவீனக் கவிதைகள் வாசிப்புக் கூடுகை” நிகழ்வில் வாசிக்கப்பட்டவையாகும்.  நுட்பம் – கவிதை இணைய இதழுக்காக எழுத்து மற்றும் ஒலிவடிவத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Courtesy :
கவிதைகள் ஒலி மூலம் : Shruti TV 

About the author

வேல் கண்ணன்

வேல் கண்ணன்

தனக்கு இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என்று தொல்காப்பியர், வள்ளுவர் முதல் அனைத்து கவிஞர்களும் என கூறும் வேல்கண்ணன் இராமநாதபுரத்தில் பிறந்தவர்; திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வியை நிறைவுச் செய்தவர். வேல்கண்ணன் திருவண்ணாமலையில் பள்ளிக் கல்வி கற்கும் சமயத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இயங்கிய தோழர்கள் அறிமுகமானார்கள். மாதாந்திர கூட்டத்தில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், போன்ற பல படைப்பாளிகள் வருகை தந்து பேசுவார்கள். முடிந்தவரை தவறாமல் அக்கூட்டங்களுக்குச் சென்றார். தமுஎச தோழர்கள் வழியாகவே பல புத்தகங்கள் அவருக்கு அறிமுகமாயின. அவர்களின் வழியாகவே 'மார்க்சியம்' மீது ஈர்ப்பு ஏற்பட்டது. காந்தியம், தமிழ் தேசியம் மீதும் பெரும் ஈடுபாடு இருந்தது.

இவரின் முதல் கவிதை உயிரோசை இணைய இதழில் (2009- ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இதழ்) 'தூரிகை இறகு' என்ற தலைப்பில் வெளியானது.
இவரின் முதல் கவிதைத் தொகுப்பு நூலை வம்சி பதிப்பகம் 2013-ல் ' இசைக்காத இசை குறிப்பு' என்ற பெயரில் வெளியிட்டது. யாவரும் பதிப்பகம் 2018-ல் ‘பாம்புகள் மேயும் கனவு நிலம்’ என்ற தலைப்பில் இரண்டாவது கவிதைத் தொகுப்பு நூலும், 2023-ல் ‘லிங்க விரல்’ என்ற தலைப்பில் மூன்றாவது கவிதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு உதவி : தமிழ் விக்கி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website