எல்லாவற்றையும் இங்கு
எல்லோரிடத்திலும் சொல்வதற்கில்லை
சொல்லும்படியும் இல்லை
யாரோ ஒருவரின்
இரசியங்களைத் தின்று வாழவே
இங்கு பலர் விரும்புகின்றார்கள்
அதனால்
அவர்கள் வாழ்ந்திடவும் செய்கிறார்கள்
என்னிடமும் இரகசியங்கள் உள்ளன
முடிந்தவரை அவற்றை
நானே தின்று தீர்க்க முயன்றேன்
அவற்றை மென்று செரிக்க முடியவில்லை
அவை என்னை கொன்றுவிடவே
ஆயுத்தமாகின்றன
அது எனக்கு ஆபத்தாகவும்
மாறலாம்
எனக்கும் கூடத்தான்
யாரோ ஒருவரின் இரகசியத்தின்
ருசி தேவைப்படுகின்றது
அதுதான் எத்துணை ருசி
எவ்வளவு சுவாரஸ்யமானது
அடுத்தவரின் அந்தரங்கங்களில்
உப்பு புளி காரம் என
எல்லாமே எப்பவும் சரியான அளவிலேயே
இருக்கின்றன
ஒருவேளை அவற்றில்
குறையிருந்தாலும்
ருசியில் ஏதும் குறைந்திருந்தாலும்
தேவையானவற்றை நாமே சேர்க்கலாம்
ஒவ்வொருவருக்கும் அதில் முழு சுதந்திரம் உண்டு
கேட்பதற்கே கொஞ்சம் கூச்சமாகத்தான்
இருக்கின்றன
பரவாயில்லை
கேட்கவா
நீங்கள் தின்று செரிக்கும்
என் இரகசியங்களில்
ருசி
உங்களுக்கு போதுமானதாக இருக்கிறதா?
அடுத்தவர் இரகசியம் எப்போதும், கேட்பவர்களுக்குக் குறு குறு வென்ற ஒரு கள்ளத்தனத்தை உண்டாகும். எவ்வளவு பெரிய இரகசியமாக இருப்பினும் ஒரு வினாடிக்காவது ஒரு வித மகிழ்ச்சியை விரும்பும் மனம். அது உளவியல். கவிதை அருமை. கவிதையின் கடைசி கேள்வி கவிஞரின் இரகசியத்தின் ருசி போதுமா என்றால் கண்டிப்பாக போதாது 🫣🫣.. இதுவும் உளவியல் தான் 🤔🤔 கவிதையைக் குரல் வடிவில் கேட்பது நன்றாக உள்ளது. நுட்பம் மின் இதழின் முயற்சி பாராட்டதக்கது. வாழ்த்துக்கள் 🥰