cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 28 கவிதைகள்

கே.பாலமுருகன் கவிதைகள்


  • வார்த்தைகளின் கடவுள்

எப்பொழுதோ
நினைத்திராத தருணத்தின்
மௌனத்திற்குள்ளிருந்து
நான் உதிர்த்த வார்த்தைகளை
கண்டுபிடித்துக் கொண்டு வருகிறாள்.

அதன் மீது படிந்திருக்கும்
காலத்தின் கலக்கங்களை
ஊதித் தள்ளி
முத்தமிட்டுத் தருகிறாள்.
பளிச்சென மின்னிக் கமழும்
அற்புதமான சொற்கூட்டங்களுக்குள்
என் வார்த்தைகள் புதிதாய்ப் பிறந்த
குழந்தைகள் போல
பொருளைச் சூப்பிக் கொண்டு
தவழ்ந்திருந்தன.

குட்டி ஒரு மாயக்காரி.


  • மாயச்சுவர்

சின்னஞ்சிறு நகங்களால்
சுவரைக் கீறும்
குட்டியின் நக இடுக்குகளில்
தவறுதலாய்
சில வார்த்தைகள்.
ஒன்று திரட்டிக் காட்டுகிறாள்.
அம்மாவிடமும் மனைவியிடமும்
குட்டியிடமும்
இன்னும் யாரோரோ அனைவரிடமும்
சொன்ன பொய்கள்
அழியாமல் மினுமினுத்திருந்தன.
பயப்பட வேண்டாமெனச் சொல்லி
அனைத்தையும் விழுங்கிக் கொண்டு
கதறி அழுதாள்.
வயிற்றுவலியென தைலத்தைப்
பூசிக் கொண்டு
என் அனைத்துப் பொய்களையும்
மன்னிக்கின்றாள்.

குட்டி ஒரு மாயக்காரி.


  • பாதத்தடங்களில் நிறையும் மழை

விளையாடிவிட்டு
வீட்டுக்குள் நுழையும்
குட்டியின் பாதத்தடங்களில்
உப்பி பல்கி
குபுகுபுவென
நிறைகிறது பருவமற்ற மழை.


கவிதைகள் வாசித்த குரல்:
கே.பாலமுருகன்
Listen On Spotify :

About the author

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்

மலேசியாவிலுள்ள கடாரம்(கெடா) என்கிற மாநிலத்தில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வரும் கே.பாலமுருகன்; 2000க்குப் பிறகு எழுத வந்த மலேசிய நவீனப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளராகவும் சிறார் நாவலாசிரியராகவும் கருதப்படுகிறார். பன்முக நவீனப் படைப்பாளியாக சிறுகதைகள், நாவல்கள், திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகள், குறுங்கதைகள், அறிவியல் புனைக்கதைகள், சிறார் நாவல்கள், கவிதைகள் என இதுவரை பதினேழு நூல்கள் இயற்றியுள்ளார்.

சிறார் இலக்கியத்திலும் பங்களித்துவரும் பாலமுருகன் இதுவரை சிறார்களுக்கு 100க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுகதைகள், நான்கு சிறார் நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட சிறுவர் குறும்படங்கள், சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்கள் படைத்திருக்கிறார். இவருடைய ‘பேபிக் குட்டி’ என்கிற சிறுகதை தமிழ்நாட்டு அரசின் மேல்நிலை முதலாம் வகுப்பு (11ஆம் வகுப்பு) மாணவர்களுக்கான ‘சிறப்புத்தமிழ்’ என்கிற அரசுப் பாடநூலில் அயலக சிறுகதைப் பிரிவில் பாடமாக இணைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கலை, இலக்கியத் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவருடைய முதல் கவிதை தொகுப்பு ' கடவுள் அலையும் நகரம்' சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பத்தால் 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website