1.
அவனது வாய்ப்புகளில் ஒன்றை
இருகைகளிலும் ஏந்திக்கொண்டவள்
ரகசியமானதொரு ஏணியை உருவாக்குகிறாள்.
அதனுடன் தன் பயணத்தைத் தொடர்கின்றவள்
உச்சிக் கிளை பறவையாகிறாள்.
அதன் பிறகு,
அவனது சிதைக்கான
முதல் சுள்ளியை,
அவனது கண்ணீருக்கான
முதல் முதுகுக்கத்தியை,
அவனது நீள் இரவுக்கான
முதல் தோல்வியை,
பேரானந்தத்துடன் அப்பறவை கொண்டு வந்தது.
ஓர் இரவில் தொலைப்பேசியின் வழியே
அவனது மனதுக்குள்
எச்சமிட்டுச் சிரித்தபடியே பறந்து சென்றது.
அப்போது,
முதுகுக்கத்தி இடம்பெயர்ந்து
மார்பில் இறங்கியிருந்ததைக் கவனித்தவன்
ஒரே ஒரு முறை மட்டும்
தனக்குள் சிரித்துக்கொண்டான்.
2.
உயிரை மட்டும் சுமந்துகொண்டு அரூபமாக
திரியும் ஓர் அந்நியனை நானறிவேன்.
அவனுக்கு முகமில்லை.
அவனுக்கு கைகள் இல்லை.
அவனுக்குக் கால்கள் இல்லை.
அந்த அரூபமா கட்டி இழுத்துவந்தேன்
ஆளில்லா கயிற்றின் மறுமுனை கண்டு குரைத்தது
நாய்.
இழுத்து வந்தவனின் கதறல்கள் யாருக்கும் கேட்கவில்லை.
உடலை எங்கு தொலைத்தாய் என்றேன்.
உடலை சுமைந்தலைவது எவ்வளவு துயரமானது
துயரத்தை தொலைத்த இடம் நினைவிலில்லை என்றான்.
கயிறு தன்னைத் தானே அவிழ்த்துக்கொண்டது.