cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

தேன்மொழி அசோக் கவிதைகள்


  • நிறமிழந்த மண்டபம்

வண்ணங்களில் பாதம் பதிக்க விரும்பும்
வெள்ளை நாய்க்குட்டி நான்
என்னால் வீடு முழுவதும்
புள்ளி வைக்க இயலும்
கோலமிட வேண்டுமாயின்
ரோமம் நனைய
வண்ணத்தில் படுத்துக்கொள்வேன்.
அவ்வப்போது ஒரு ரொட்டித்துண்டைக் கொடுங்கள்
வாலால் வண்ணம் திட்டுவேன் சுவரெங்கும்.
என்றபோதிலும்
சங்கிலி இருக்கும்வரை
நான் வெள்ளை நாய்க்குட்டி மட்டும்தான்
வீடும் நிறமிழந்த மண்டபம்தான்.


  • கடைசி மிடறு

பிறந்த குழந்தையின்
சிறுசிறு மிடறுகளாய்த்தான்
என்னுள் வந்தடைந்தாய்.
அம்மீச்சிறு மிடறுகளை
அவ்வளவு எளிதில் வெளியேற்றாமல்
கூழைக்கடாவாகி தொண்டைக் குழியிலேயே
சேமித்து வைத்துக்கொண்டேன்.
எவ்வளவு காலம் ஈரம் தங்குமோ
அவ்வளவு அவ்வளவு காலம்
நீயும் நானும் தங்குவோம்.

நினைவின் கடைசி மிடறுவரைதான்
நம் நேசம் வாழுமெனில்
எந்தச் சுவற்றில் வரைவது
அந்தப் பழம்பெரும் சித்திரத்தை?


  • உருமாற்றம்

வானம் கடலாகும்போது
மேகம் தூண்டிலாகிப் போகின்றது
நீந்தும் வெள்ளி நிலவு
மீனாக உருமாறுகின்றது.

ஒவ்வொரு மேகத் தூண்டிலிடமிருந்தும் தப்பித்து
நீலக் கடலிலேயே வலம் வரக்கூடிய
தந்திரக்காரி அந்த வட்ட நிலா!

அமாவாசைக் கடலிலும்
தூண்டில் போடக் காத்திருக்கும்
முட்டாள் பயல் இந்தத் தூண்டில்காரன்!

ஒட்டு மொத்தக் கதையையும்
கேலி பேசி சிரிக்கும் ஊர்க்காரர்கள்
நட்சத்திரக் கூட்டமென்றால்
நீங்கள்தான் அத்தனைக்கும் அத்தாட்சி!


கவிதைகள் வாசித்த குரல்:
தேன்மொழி அசோக்
Listen On Spotify :

About the author

தேன்மொழி அசோக்

தேன்மொழி அசோக்

தேன்மொழி சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது கவிதைகள் சிங்கப்பூரின் தமிழ் முரசு,மக்கள் மனம்,மின்கிறுக்கல் மின்னிதழ் மற்றும் கவிமாலையின் ஆண்டுத் தொகுப்பிலும்,தமிழ் நாட்டின் வாசகசாலை இணைய இதழ் மற்றும் வளரி மாத இதழிலும் வெளியாகியிருக்கின்றன.கவிதைகளை வாசித்துக் குரல் பதிவு செய்வதிலும் ஆர்வம் மிகுந்தவர்.
சிங்கப்பூரின் ஒலி 96.8ல் இவரது கவிதை வாசிப்பு ஒலித்திருக்கிறது. சிங்கப்பூரின் தங்கமுனைப் போட்டியில் (2023) இவரின் கவிதைகள் மூன்றாவது பரிசை பெற்றிருக்கிறது.

இவரது கவிதை வாசிப்பினைக் கேட்க https://youtube.com/@user-mv9zg9ry6u .

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website