cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

ப்ரிம்யா கிராஸ்வின் கவிதை


பூ!

“வெறுந்தலையா போறியே…
கொஞ்சம்
பூ வாங்கி வெச்சுட்டு போம்மா!”,
என்பாள்
அந்த நடைமேடை பூக்காரபாட்டி!

‘ வேண்டாம் ‘ எனும்படி
தலையசைத்துக்கொண்டே
“உடம்ப பாத்துக்கோங்க பாட்டி”,
என்பேன் நான்!

ஒரு நாள் கூட
நான் அவளிடம்
பூ வாங்கியதும்
இல்லை…

ஒருநாளும்
அவள் தன் உடம்பைப்
பேணவும் இல்லை!

நடைபாதையில்
சிலநாளாய் அவளைக் காணவில்லை…
யாராவது
பூ வாங்கிக்கொள்ளச்
சொல்ல மாட்டார்களா
என்றிருக்கிறது!


உதிரும் மஞ்சள்!

மஞ்சள் பூக்கள் அடர்ந்திருந்த
மரமொன்றின் அடியில்
பள்ளிச் சிறுமி நான்
தினமும் நிற்பேன்!

தலைமீது
ஒற்றைப் பூ மட்டும்
உதிர்ந்து விட்டால் போதும்,
அன்றைய நாளில் எல்லாம்
சுகப்படுமென்று
நம்பியிருந்தேன்….

அன்றையதேர்வில்
படித்த கேள்விகள் மட்டும்தான்
வரும் என்று,

என் பிரியத்துக்குரிய
ரெமி டீச்சர்
என்னை
‘வெரி குட் கேர்ள்’
சொல்லுவாள் என்று!

வேப்பமுத்துக்கு
சவ்வுமிட்டாய் வாட்ச்
கட்டிவிடுகிற தாத்தா,
கொசுறாய் கொஞ்சம்
மிட்டாயை
என் கன்னத்தில்
ஒட்டுவாரென்று…

எல்லா நாளும்
கேட்டவுடன்
மலர் உதிர்த்து விடும் மரம்,
“நீ எப்போதும் என்னுடன்
இருப்பாயா?”
என்றபோது,
பூவையுதிர்க்காமல்
சும்மாயிருந்தது…

பிறகொரு நாள்
அவ்விடத்தில் தார்ச்சாலை
வந்தது!


கவிதைகள் வாசித்த குரல்:
ப்ரிம்யா கிராஸ்வின்
Listen On Spotify :

About the author

ப்ரிம்யா க்ராஸ்வின்

ப்ரிம்யா க்ராஸ்வின்

தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தை சார்ந்தவர் ப்ரிம்யா கிராஸ்வின். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறார். இவரின் கவிதைகள், சிறுகதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி இருக்கிறது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “தப்பரும்பு” வாசகசாலை பதிப்பகத்தின் வெளியீடாக 2022-ஆம் ஆண்டு வெளியானது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website