cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 30 கவிதைகள்

வேல் கண்ணன் கவிதைகள்


1.

வற்றிய நதிக்கரை கூழாங்கற்களைக் காய்ச்சியது மேல் திசை

இருளடைந்து
பெரும் ராஜ்யம் வீழ்ந்த பின்
கால்கள் குழறி
மலையடிவாரம் நோக்கி நகர்கிறேன்
மித மிஞ்சிய ஆறுதல் தருகிறது தென்காற்று

சீரற்ற செங்குத்தான பாறைகள் மீதேறி
மலை படுகையில் வடக்கிருந்தேன்
வாடை காற்று சூழ்ந்தது

நிகரற்ற ஒளியுடன் கருமேகங்கள் வழங்கியபடி இருக்கிறது
கீழ்த்திசை


2.

எச்சில் துப்பும் பாத்திரம் நிரம்பியிருந்தது
என் வயிறு போல
சிறுநீர் தாங்கிய பை பெருத்திருந்தது

வறண்ட நாக்கு மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது
அவ்வப்போது
உள்நாக்கு தொண்டைக்குழிக்குள் சுருங்கிக் கொள்கிறது

கடிகார முள் நகர்வு சத்தம் நரம்புக்குள் ஊசியெற்றியது
வைர இதய கொண்ட ஜீசஸ் காலண்டர் சுவர் உராய்வு
காதருகில் தொழிற்சாலை சங்கு‌ ஊதியது

உயரமான மாடி
மலையுச்சி
விரைந்து ஓடும் தொடர்வண்டியிலிருந்து
தவறி விழுந்தபடியும்
தலை சுக்கு நூறாக தெறித்தபடியுமான
கனவிலிருந்து திரும்பத் திரும்ப எழுந்த படியே இருக்கிறேன்

யாரேனும் ஒருவர்
கடைசியாகத் தனது
சுட்டுவிரலைக் கொடுங்கள் அல்லது பிடித்துக் கொள்ளுங்கள்


3.

வழியெங்கும் கேள்விகளால் துளைத்தெடுக்கிறாய்
இடையிடையே வசைச் சொற்கள்

பதில்களிலிருந்து எழும் கேள்விகள்
எண்ணிக்கையில் அடங்காதவை

பாதசாரிகள்
கேட்டும் பார்த்தும் பாராமல் சென்றார்கள்
சிலர் விலகி விலகாமல் நின்றார்கள்
வீதி ஆர்ப்பாட்டமின்றி ஆர்வமுற்றிருந்தது

வந்ததும்
அறைக் கதவை தாழிட்டுக் கொண்டாய்
எனக்கான கதவுகளின்றி வெளியேறினேன்

சைக்கிள் சிறுவன்
வண்ண பலூன்கள் படபடக்க
கைகளை இறக்கையைப் போல விரித்து
‘உய்ய்ய்ய்ய்ய்.. ‘ என்றபடி கடந்தான்

‘உய்ய்.. ‘யில் பறந்தேன்


கவிதைகள் வாசித்த குரல்:
அன்புமணிவேல்
Listen On Spotify :

About the author

வேல் கண்ணன்

வேல் கண்ணன்

தனக்கு இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என்று தொல்காப்பியர், வள்ளுவர் முதல் அனைத்து கவிஞர்களும் என கூறும் வேல்கண்ணன் இராமநாதபுரத்தில் பிறந்தவர்; திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வியை நிறைவுச் செய்தவர். வேல்கண்ணன் திருவண்ணாமலையில் பள்ளிக் கல்வி கற்கும் சமயத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இயங்கிய தோழர்கள் அறிமுகமானார்கள். மாதாந்திர கூட்டத்தில் எழுத்தாளர்கள், ஓவியர்கள், போன்ற பல படைப்பாளிகள் வருகை தந்து பேசுவார்கள். முடிந்தவரை தவறாமல் அக்கூட்டங்களுக்குச் சென்றார். தமுஎச தோழர்கள் வழியாகவே பல புத்தகங்கள் அவருக்கு அறிமுகமாயின. அவர்களின் வழியாகவே 'மார்க்சியம்' மீது ஈர்ப்பு ஏற்பட்டது. காந்தியம், தமிழ் தேசியம் மீதும் பெரும் ஈடுபாடு இருந்தது.

இவரின் முதல் கவிதை உயிரோசை இணைய இதழில் (2009- ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இதழ்) 'தூரிகை இறகு' என்ற தலைப்பில் வெளியானது.
இவரின் முதல் கவிதைத் தொகுப்பு நூலை வம்சி பதிப்பகம் 2013-ல் ' இசைக்காத இசை குறிப்பு' என்ற பெயரில் வெளியிட்டது. யாவரும் பதிப்பகம் 2018-ல் ‘பாம்புகள் மேயும் கனவு நிலம்’ என்ற தலைப்பில் இரண்டாவது கவிதைத் தொகுப்பு நூலும், 2023-ல் ‘லிங்க விரல்’ என்ற தலைப்பில் மூன்றாவது கவிதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு உதவி : தமிழ் விக்கி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website