தூரத்தே பறக்கும் பறவையின் மனத்துணுக்குகளை,
கொண்டாடும் மேகக் கூட்டத்தின் வான் பொழிவை,
குளிரூட்டும் பனிக்கால நடுக்கங்களை,
குறிச்சொற்கள் அனுப்பி வைக்கிறாள் தினந்தோறும்.
அவள் வீற்றிருக்கும் பவளக்கூட்டுச் சோலைகளில்
அவளைத் தவிர வேறில்லை.
பச்சை வாசமும்
கண்ணாடி நீர் நிலைகளுமே.
ஒரு மான் போல நீரைப் பருகுவாள்
உதட்டோரம் ஒழுகும் நீரினில் தகிக்கும் சூடு.
ஆற்றுப்படுகையில் நடக்கும் என் பாதங்களைப் பொசுக்கும்.
அன்றே அவள் குறுஞ்செய்திகளை
ஆற்றின் பாறையிடுக்குகளில் மீனுக்கு அனுப்பிவைத்திருக்கிறாள்.
சொற்களிலிருந்து மொழிக்கும்
அதன் அடுக்குகளில் தேங்கும் வார்த்தைகளும்
அவளின் ஆதிக்குரலில் இருந்து வந்தவை.
“நலமா என்றோ நீ தானே என்றும்
இதோ வந்துகொண்டு இருக்கிறேன் உனக்காக தானே என்று….ம்..
குடுவையில் கலந்திருக்கும்
போத்தலில் மயக்கங்களைத் தீர்க்க
இரவு எப்போதும் துணை நிற்கிறது.
சில சமயங்கள் பகலும்.
தவிர..,
ஆழங்களைத் துளையிட்டு நிரப்பிய புனைவின் காட்சிப் பிழை,
அந்தக் கானக் காலங்களில்
வழிந்தோடினால்,
அங்கு நம் ஞாபகம்
இருந்ததே இல்லை.
தொடங்கும் ஒரு நதி
ஞாபகச் சுனையைக் கண்டுபிடிக்காத பறவை
யாரோ ஒருவரின் மனதில் உண்டு என்பதில் எனக்கு உடன்பாடில்லை….
இதை இப்படியே நிறுத்திவிடுவோம்.