1.
தவறிய அழைப்புகளை எடுத்துப் பார்க்கிறேன்
அந்த நபர்
எப்போதோ
யார் மூலமாகவோ எனக்கு அறிமுகமாயிருக்க வேண்டும்.
என்மீது நெடுநாட்களாய் அன்பு செலுத்துவதற்கு பதில்
குரூரமான வன்மத்தை வளர்த்துக் கொண்டவராய் இருக்கலாம்.
ஒரு கொலையை அரங்கேற்றுபவனாய் இருக்கலாம்.
அதனைத் தொழில்முறையாக ஏற்றுக் கொண்டவனாக
இருக்கவேண்டுமென
எந்தவொரு தர்க்க நீதியும் இல்லை.
தற்போது
உலகியலை அணைத்துவிட்டுத் தூங்க வேண்டும்
பிரார்த்தனைச் சிலுவைக் குறியிட்டுக் கொள்வதற்கு
முழங்காலிடுகிறேன்.
2.
குறிபார்த்து அடித்ததில் வீழ்ந்தது
காட்டுச் சேவல்.
கைகளில் ஏந்திக் கொண்டு
அதன் சிவந்த கொண்டையில் முத்தமிட்டேன்
கூடவே எனக்கு வெற்றியை பரிசாக்கிய கவண் வில்லுக்கும்.
மயிர்கள் பிடுங்கபட்ட
சேவல் அழகாய் காட்சியளித்தது.
அரைத்து வைத்த நாட்டு மஞ்சளுக்கு
ருசி தனி.
நாட்டுச் சாராயத்துடன்
நாட்டுச் சுருட்டு, மணக்கும் ஊதுவத்தி,
கற்பூரம், மூனு வெத்திலை பாக்குடன்
படையிலிட்டோம்
ஏரிக்கரை காவல் தெய்வத்துக்கு.
3.
இறைச்சித் துண்டங்களை
சரிபாதியாய் பங்கிட்டுக் கொண்டோம்.
இருவரின் கோப்பைகளிலும்
சம அளவு
மது ஊற்றப்பட்டது.
பிறகு இருவரும்
புணர்ச்சியில் துய்த்தோம்.
பிறகு வழக்கம் போல்
முகமன் கூறிக்கொண்டு
விடைபெறும் முன்னர்
தழுவிக் கொண்டோம்.
உன்னை காதலிக்கிறேன் என்று
இருவரும் எப்போதும் அப்பதத்தை பகிர்ந்து கொண்டதில்லை.
அல்லது
அப்படியொரு போலிப் பதத்தை பயன்படுத்துவதை
இருவரும் தவிர்த்துவிட்டோம் உளப்பூர்வமாக.
இரண்டாவதும் மூன்றாவதும் தரம்!!❤️ இரண்டாவதுல படிக்கும்போது எனக்குத் தோன்றியது-காவல் தெய்வம் மனுசனுக்கு தான், காட்டு சேவலைக் காப்பாத்தாத நாட்டார் தெய்வமும் தன்னைக் காப்பாற்ற சொல்லி காட்டு சேவலை படையலிடும் மனிதனும் எவ்வளவு பெரிய தன்னலமிக்க முரணான வாழ்விது !!!😀