cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 31 கவிதைகள்

ரிஷி கவிதைகள்

ரிஷி
Written by ரிஷி

  • உண்மை

உண்மையெனும் ரோஜாவின் மணம்
ஊர்முழுக்கப் பரவும் என்றபடியே
இதழிதழாய்ப் பிய்த்துக்கொண்டார்கள்.
ஆளுக்கொரு பிடி யள்ளிக்கொண்டார்கள்.
சிலர் வாயில் போட்டு மென்றார்கள்
சிலர் மூடிய உள்ளங்கையில் முனைப்பாகக் கசக்கியெறிந்தார்கள்.

சுருங்கிக்கிடந்த இதழொன்றை யெடுத்து
இதுதான் முழு ரோஜா என்றார் ஒருவர்.
பின்னோடு வந்தவர்கள் ’அதேதான், அதேதான்’ என்றார்கள்.

வழியெங்கும் காலையில் இறைந்துகிடந்த
இதழ்களின் வண்ணம்
அந்தியில் வெளிறிப்போயிருந்தது.

இதுதான் அசல் ரோஜா நிறம் என்றார் ஒருவர்.
‘அதேதான் அதேதான்’ என்றார்கள்
அருகே நின்றிருந்தவர்கள்.

நூற்றுக்கு நூறு உண்மை
சில பத்திருபதுகள் குறைந்து திரிந்து
அரைகுறை உண்மையாகி
கரைகடந்து நகர்வலம் போய்க்கொண்டிருப்பதைக்
கண்ணால் பார்த்ததாய் யாரோ சொல்ல
யாரோ கேட்க……….


  • சூழமைவு

அருங்காட்சியகத்திலான அரிய சிற்பம் ஒன்று.
அழகோ அழகு!
ஆழ் அமைதியே அலங்காரமாய் அங்கே நின்றுகொண்டிருக்கிறது.

அவ்வப்போது அதைச் சுற்றி சில பூக்கள்
மலர்ந்திருக்கின்றன.
அவற்றின் சுகந்தம் அசாதாரணமாய்

அது நின்றிருக்கும் இருட்தாழ்வாரத்தின் ஜன்னல்திறப்பினருகே
சுற்றிச்சுற்றி வருகின்றன சில வண்டுகள்
புள்ளினங்கள்
யானைகள் யாளிகளும்கூட.

கவனமாகப் பராமரிக்கும் பாதுகாவலர்கள்
இரவில் சில சமயங்களில் அந்தச் சிலை
தன்னோடு பேசும் என்கிறார்கள்.
தனக்குத்தானே அத்தனை அருமையாகப்
பாடிக் கொள்ளும் என்கிறார்கள்.

அவர்களைப்பார்த்தால் மனநோயாளிகளாகத்
தோன்றவில்லை.
பிராபல்யத்துக்காகப் பேசுபவர்களாகவும்
தெரியவில்லை.

தவிர,
அடிக்கடி அங்கே செல்லும் எனக்கே
அந்தச் சிற்பத்தின் கன்னங்குழிந்த அன்பு கனிந்த புன்சிரிப்பைப் பார்க்கக் கிடைத்திருக்கிறது.

ஆனால் நிறைய பேர் அது பழையதாகிவிட்டது என்கிறார்கள்.
அது பேய்போல் இருக்கிறது என்கிறார்கள்.
அது அருங்காட்சியகத்தில் இடம்பெறத்
தகுதியற்றது என்கிறார்கள்.
அதை அங்கிருந்து அகற்றிவிட
வேண்டும் என்கிறார்கள்.

அது பேசுவதாகச் சொல்லும் காவற்காரரை
வேலையிலிருந்து அனுப்பிவிடவேண்டும் என்கிறார்கள்.

அது கன்னங்குழிய அன்புகனியப் புன்னகைப்பதாகச் சொல்லும்
என் காலை யொடித்து அங்கே வரவிடாமல் செய்ய
வேண்டும் என்கிறார்கள்.

எல்லாவற்றையும் மௌனமாகச்
செவிமடுத்தபடியிருக்கிறோம்
நானும்
என்னொத்த பார்வையாளர்களும்
அந்தப் பாதுகாவலர்களும்
அச்சிற்பமும்…….


‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)

About the author

ரிஷி

ரிஷி

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கடந்த 40 வருடங்களாக நவீன தமிழ் இலக்கிய வெளியில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதிவரும் லதா ராமகிருஷ்ணன் அநாமிகா என்ற புனைபெயரில் கதைகளும், ரிஷி என்ற பெயரில் கவிதைகளும் எழுதுபவர். .

இதுவரை 1.அலைமுகம், 2.என்உனக்கு, 3..மற்றும் சில திறவாக் கதவுகள், 4.காலத்தின் சில தோற்ற நிலைகள், 5.வாக்கு, 6.அன்பின் பெயரால், 7.காலநிலை, 8..போகிற போக்கில், 9. இப்போது, 10. அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள், 11.தனிமொழியின் உரையாடல், 12.உள்வெளி, 13.குறுக்கு வழிகளற்ற நெடுந்தொலைவு, 14. எதிர்வினை, 15. வரியிடைவரிகள், 16.சொல்லடி சிவசக்தி, 17.புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக் கும் கண்ணீர்த்துளி, 18. RAIN BEYOND AND OTHER POEMS _ ஆகிய பதினெட்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

முதல் நான்கு தொகுப்புகள் உள்ளங்கையுலகு – பாகம் 1 என்பதாக புதுப்புனல் பதிப்பகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்புகள் செய்துவரும் இவர் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மூன்று சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் தமிழில் வெளிவந்துள்ளன. குழந்தைகளுக்கான கதைகளையும் எழுதியுள்ளார்; மொழி பெயர்த்துள்ளார். WELFARE FOUNDATION OF THE BLIND என்ற பார்வையற்றோர் நன்னல அமைப்பின் அங்கத்தினராக, பார்வையற்றவர்கள் எழுதிய படைப்புகளையும், பார்வையற்றவர்களைப் பற்றி எழுதப் பட்டவற்றையும் நூலாக்கம் செய்து ஆவணப்படுத்தும் பொறுப்பில் இருக்கிறார்.

பேஸ்புக் நட்புவட்டத்தில் சக கவிஞர்கள் எழுதிய கவிதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பதிவேற்றிவருகிறார்.

1957, நவம்பரில் பிறந்தவர் . ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டதாரி. 28 வருடங்கள் அரசுப்பணியில் இருந்து பின் விருப்ப ஓய்வு பெற்றவர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website