சுயந்தொலைத்து
சுகமாய் வாழ
சிருஷ்டி செய்யப்பட்ட
சொர்க்கத்தின்
வாசலில்
காவலிருக்கின்றன
செந்நாய்கள்.
இறக்கைகளைப்
பிய்த்தபின்
இருக்குமிடத்திலேயே
பறக்கப் பழகப்
பயிற்சி எடுக்கின்றன
பச்சைக் கிளிகள்.
விழிகளை மூடியபடி
இருண்ட பூலோகத்தை
இரவென்றும்
பகலென்றும்
பகுத்துக் கொள்கின்றன
ருத்திராட்சப் பூனைகள்.
அகமழித்து
ஆதியின் சுடரேந்தி
இருள் கிழிக்கும்
பிரபஞ்சப் பேரொளியாய்
ஒருத்தி
என்றேனும்
உதிக்கக்கூடும்.