பொன்னம்மா பாட்டி
ஆறில் மிஞ்சியது
நான்கு
தாத்தா பிரசங்கத்திற்கு
ஊர் சுற்றி வர
பணியாரம் சுட்டு
பிள்ளைகள் வளர்த்திருக்கிறாள்
சற்றே அதிகமான மீசை
குள்ள உருவம்
வட்டப் பொட்டு
அவள் சுடும்
ஆப்பம் அவ்வளவு ருசி
மூன்று பேரன்களில்
அண்ணனிடம் மட்டும்
அவ்வளவு பாசம்
கீற்றுக் கொட்டகையில்
மணலில் அமர்ந்து
மம்பட்டியான் பார்த்தது
நேற்று போல நிழலாடுகிறது
அம்மாவுக்கும் அவளுக்கும்
எப்போதும் ஆகாது
பையனுக்கே பால் விற்றவள்
நீர் கலக்க வலுத்தது சண்டை
கோபம் வந்தால்
வாயில் வசவும்
புடவையும் சற்றே
மேலேறும்
விஷப்பூச்சிக் கடித்திட
‘மகமாயி புள்ளய காப்பாத்து’
எனைத்தூக்கி ஓடிப்போய்
மருத்துவமனை சேர்த்தவள்
கனகாம்பரம் விற்றுக்
காசு சேர்த்தவள்
பசப்பு வார்த்தை கேட்டு
சொந்தத்திடம் இழந்து விட்டு
நெஞ்சைப் பிடித்தபடி
‘தோட்டத்துக்கே கூட்டிக்கிட்டுப்
போய்டுங்க’
கேட்டுக் கொண்டே
யார் முகமும் பார்க்காமல்
போய்ச் சேர்ந்தாள்
மகராசி.
பெருமாள் தாத்தா
பாட்டிக்குத் தம்பி
எங்களுக்கு எப்போதும்
பெருமாள் தாத்தா
தோட்டத்திற்கு வந்தால்
சில மாதங்கள்
பெரும்பாலும் வருடங்கள்
கல்சட்டி தூக்கி தூக்கித்
தலையெல்லாம் சொட்டை
குடித்த பின் தாத்தா
குழந்தையாகி விடுவார்
‘பசங்க பெருசாயி
ஒக்காளி
எல்லா தோட்டத்தையும்
வாங்கிருவானுங்க
இருங்கடா’
தாத்தாவுக்கு பெருமாளு
மச்சான் சலம்பினாலும்
மனசுக்குள் சந்தோஷம்
மனைவியைவிட
மச்சானிடம்தான்
பிரியம் அதிகம்
வெகு நாட்களுக்குப் பின்
தோட்டம் கைவிட்டுப் போனபின்
கைபிடித்துப் பேசியவர்
மூளை நரம்பு வெடித்து
இறந்து போனார் இரண்டாம் நாளில்.