- எதுவாகினும் செய்…! எப்படியும் செய் .!
மழுங்கிக் கொண்டே இருக்கிறது
வார்த்தைகள் யாவுமே.!
பெருவெளியில் தகித்துக் கொண்டு
இருக்கும் கானல் நீர் …
நா வறண்ட நிலையில் அள்ளி
பருக எத்தனிக்கும் போது உங்கள்
வார்த்தைகள் வாள் வீசுகிறது…
குருதியின் இளஞ்சிவப்பில்
மழையின் வெண்ணிறம் கலக்க, நான்…
காளியாக வேண்டும்.
முகமூடிகள் அணிந்த ஒரு
மாயத் தோற்றம் எனக்கு வாய்க்க
காளியே சிறந்த அலங்காரம்…!
எதுவாகினும் செய்.. !
எப்படியும் செய்..!
என் செவிகளுக்கு எட்டும் முன்
மரித்துப் போகும் உங்கள் வார்த்தைகள்..
சுடருக்கு வாய்த்தது பூக்கள்அணிந்த தேவதையல்ல….
காளி என நினை…!
அறியப்பட்ட நீதிகள் யாவும்
கொன்று ஒழிக்க அவளின் நாவே
சிறந்த ருசிக் கொள்ளி….
மீண்டும் பிருந்தாவனமாகவா ? போவேன் நான்..?
பூக்களின் வாசனையை பூசிக் கொள்ள அல்ல..
மானுடத் துரோகத்தால் என்னை
காளியாக்கிய உன்னை வதம் செய்யவே…
வனத்தில் உக்கிரத்துடன் கிடக்கிறேன்…….!
எதுவாகினும் செய்….!
எப்படியும் செய்…!
என் செவிகளுக்கு எட்டும்
முன் மரித்து போகும் உங்கள் வார்த்தைகள்…..!
*****
ஜன்னலிலிருந்து எட்டிப் பார்க்கிறேன்..
பாதசாரிகள் நடக்கிறார்கள்…
அதுவல்ல விஷயம்…
சூரியனின் அடர்த்தி மெல்ல மெல்ல
என் வீட்டினில் பரவுகிறது..
இளைப்பாற வந்தது போல்
ஒரு எண்ணம்..
எண்ணங்கள் செயலாகும் போல…
டீ…காபி…. ஹார்லிக்ஸ், குளிர்பானங்கள் என
ஏதாவது பருக வேண்டுமா என்று கேட்டேன்..
“நிழல் பருக“ என் வீட்டுக்கு வந்தேன் என்றது….!
அழையா விருந்தாளி…..
ஏ.சியை சற்று அதிகப்படுத்திவிட்டு
என் வீட்டின் ஜன்னல்களையும், வீட்டின் கதவையும்
பூட்டி விட்டு நான் வெளியேறினேன்….!
*****
பயணமே இதிகாச கனவு
சலனங்களற்ற பாதையின் பொருள்..
பிடாரியின் சிக்கெடுக்காத
முடியில் சிக்கியிருக்கும்..
காரண காரியங்களைத் தேடுவதில்
விளக்கம் பொருள்படாதது….
யாசகனின் பாதத்தில்
அப்பியிருக்கும் ஒரு பிடி மண்
கொடுக்கும் ஒரு மாளிகையை
அரசனே அங்கு யாசகன் ஆவான்..
வருந்தி பிழையை அழையாதே
பிழையே சகி…
நேசி..
பின் வெறுக்கப்படும் யாவுமே
நுனி துளி எச்சில் தாகம்… தீர்க்குமோ..?
வறண்ட தொண்டை கதை பேசும்
நாவின் சுவையைச்
சலனமற்ற நீரோடையில் மிதந்து வா…
இலையைப் போல….
அல்லது பிணங்களைப் போல,
நீர் பழகு மீன் குஞ்சுகள் கதை பேசி
திரியும் சுவை அறிவாய்…..!
யாசி..!