01.
முழு ஆகாயமென உன்னை
கண்டுகொள்கிறேன்
அப்போதெல்லாம் பறவையென
நீந்தி நீந்தி
காதல் கண்டுகொள்ள முடிகிறது ..
நேசத்தின் தாற்பரியங்கள் எல்லாம் இப்படித்தான்..
சிலவேளைகளில் மேகங்கள் ஒளித்து வைத்திருக்கும்
ஆகாயத்தின் மீதி துண்டங்களை
தேடிக்களைக்கத்தான் வேண்டும்
நீ என் தேடுதல் .
02.
எனது காலத்தின் பேரழகோடு
தோன்றி முடிப்பவன் நீ
ஒவ்வொரு அந்தியிலும்
உன் அழைப்பிற்கு முன்னராக
நெஞ்சில் பூத்த ஒரு மலரோடு
காத்திருக்கத் தொடங்கிவிட்டேன்.
என்றாவது ஒரு நாள்
என்னைக் கண்டுகொள்வாய்
ஆயிரம் ஆயிரம் பூக்கள் பூத்த
பெருங்காடாக……
03.
உடைந்து போகும் வானவில்லின்
ரேகையைப் போல
நினைவெல்லாம் உன் எண்ணங்களின் வண்ணங்கள்
மெல்ல எழும் அந்தியின் பொழுதில்
அதில் சிறகுகளை தோய்த்தெழ புறப்படுகிறேன்
நாளை உன் கூடடைவேன்…
நீ என் கனவுகளின் வண்ணம்.