cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 32 கவிதைகள்

ந.பெரியசாமி கவிதைகள்


1.நிசப்தம்

மழை
மண்ணில் ஓடிய நாளின்
விடியலில்
உணர முடிகிறது
இலை பிரிந்த
வலி கூறும்
மரத்தின் முனகலை.


2.வன்மம்

பாவனையாக
போடப்பட்ட ரொட்டித் துண்டிற்காக
நாயின் மூச்சிரைப்பில்
ஏமாற்றம்
மீண்டும் ஏமாறுவது
அதன் பிழையில்லை.

வன்மம்
அது அறியாது


3.மிச்சம்

சிறிதான இருமல்
போதுமானதாக இருக்கிறது
அப்படியொரு வேகம்
கேட்டைத் திறப்பதற்குள் வந்துவிடுகிறது
இந்த அன்பைக் காட்டிலும்
இரண்டு துண்டு பிஸ்கட்டுகளை
மிச்சப்படுத்தி
வாழ்ந்தென்ன
கிழித்திடப் போகிறோம்.


4.டிக்காசன் நிற நிலவு

நள்ளிரவில்
பணியிலிருந்தவன்
தன் தேநீரை
நிலவோடு பகிர்ந்தான்
சற்றே தூக்கலான டிக்காசனை
தன் நிறமாக்கிக் கொண்டது நிலவு
கொள்ளை அழகு கொள்ளை அழகென்பதை
அன்றுதான்
கண்டுகொண்டான்.


கவிதைகள் வாசித்த குரல்:
தேன்மொழி அசோக்
Listen On Spotify :

About the author

ந.பெரியசாமி

ந.பெரியசாமி

ஒசூரைச் சேர்ந்த இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ‘நதிச்சிறை’, ‘மதுவாகினி’, ‘தோட்டாக்கள் பாயும் வெளி’, ‘குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீல வானம்’ ஆகிய கவிதை தொகுப்புகளையும், ‘மொழியின் நிழல்’ எனும் கவிதை சார்ந்த விமர்சனக் கட்டுரை தொகுப்பையும் எழுதியுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website