cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 32 கவிதைகள்

அம்மாவின் பாடல்.


ரோசாப்பூ ரவிக்கைகாரியின்
“உச்சி வகிடெடுத்து”,
கன்னிப்பருவத்திலேவின்
“பட்டுவண்ண ரோசாவாம்”
ஆகிய இரண்டு பாடல்களை
எங்கு கேட்டாலும்
அசையாமல் நின்றுவிடுவாள் அம்மா

வீட்டில் ஏதேனும் வேலையாக
நடந்து கொண்டிருந்தாளெனில்
நடை தளர்ந்துவிடும்
சந்தையில்,
கடைத்தெருவில் இருந்தாளெனில்
ஒரு ஓரமாக நின்றுகொள்வாள்

வீட்டிலிருக்கும்போது
கன்றில்லாத பசுவின் மடியில்
காம்பு சுரத்து ஒழுகுவதைபோல
அம்மாவின் கண்களில் கண்ணீர் வழியும்

பொதுவெளியில் கேட்டுவிடும்போது
முந்தியின் ஓரத்தை எடுத்து
தூசை துடைப்பதுபோல்
கண்களை துடைத்துக்கொள்வாள்

இச்செய்கை
எல்லோரும் உறங்கும் வேளையில்
வந்துவிட்டு போகும் மின்னலைப்போல் இருக்கும்

வீட்டில் எல்லோரும் சென்றுவிட்ட
தனிமையில்
எதாவது ஒரு பாடலை
வாய்க்குள் முணுமுணுத்தபடி இருப்பாள்

அப்பொழுதெல்லாம்
இது அந்த பாடல்கள் தானாவென
யூகிக்க முயல்வேன்
அது
வேறொரு தாலாட்டாக மாறிவிடும்.


கவிதைகள் வாசித்த குரல்:
வீணா
Listen On Spotify :

About the author

சேலம் ராஜா

சேலம் ராஜா

கனரக வாகன ஓட்டுனராக பணிபுரியும் சேலம் ராஜா இலக்கிய வாசிப்பு, கவிதை, கதை, கட்டுரை, போட்டோகிராபி என இயங்கி வருபவர்.
மூன்று வருடங்களுக்கு முன் "கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக்குறிப்புகள்" எனும் கவிதை தொகுப்பு வெளியானது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விருது, படைப்பு சிறந்த தொகுப்பு விருது , தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வளரும் படைப்பாளர் விருது போன்ற விருதுகள் பெற்றுள்ளார். இவரின் அடுத்த கவிதைத் தொகுப்பான ’மயில் பற்றிய குறிப்புகள்’ சமீபத்தில் (2023- பிப்ரவரி) வெளியானது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website