cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 33 கவிதைகள்

வேனிற்கால குறிப்புகள்

கண்ணன்
Written by கண்ணன்

மிழய்யாவின் பிரம்படியாக
சுள்ளென்று முதுகில் அடிக்கிறது
மதியநேர வெய்யில்
மல்லாந்து செத்துக் கிடக்கும் தவளைகளாய்
வெட்டப்பட்ட மரங்கள்
வெக்கை தாங்காது தோள் துண்டைத் தலைக்குப் போர்த்தியபடியே
மாட்டைப் பற்றுகிறார் சம்சாரி ஒருவர்
குடையில் ஒளிந்த படியே இளைஞிகள் நடக்க
தண்ணீர் போத்தலின் ஷவரில் நனைந்த படியாக இளைஞன் ஒருவன்
வாகனங்கள் ஏறிக் கானல் நீர் தெறித்து
துடைத்தபடி செல்லும் பாதசாரிகள்
இரண்டு வாரங்களுக்கு முன்பு பார்க்கையில்
புதுரோடு நிறுத்தத்தில்
கண்ணாடிக் குடுவைகளில்
வண்ண மீன்களை
சமைத்துக் கொண்டிருந்தது
இந்த இரக்கமற்ற வெய்யில்

********

ங்கவள்ளி பிரதான சாலையில்
அண்ணா சிலையருகில் வலப்புறம் திரும்பினால்
சேகர் சலூன்

எதிர்ப்புற சுவரில்
வண்டியை நிறுத்தாதேவுக்குக் கீழே
மூன்று வண்டிகள்

வெட்கத்துடன் பதில் வணக்கம் வைக்கும்
வெள்ளை வேட்டி சட்டையணிந்த சேகரின் தந்தையை
இன்று வாசலில் காணவில்லை

தாத்தா தலையைப் பிடிக்க
பீய்ச்சியடிக்கும் தண்ணீருக்கு
முகம் சுளித்து
‘வந்து ரெண்டு மணிநேரம் ஆச்சு’ என சலிக்கும்
இரண்டாம் வகுப்பு சிறுவனை
சத்தத்துடன் ஓடும் மின்விசிறிக்குக் கீழே
ஹாரி பாட்டர் படம் போர்த்தியபடி
சுழல் நாற்காலியிலமர்ந்து
போனில் படம் பிடிக்கத் தயங்கியபடி
சொற்களால் படம் பிடித்த என்னை
இன்றைய காலையில்
பார்த்திருக்கலாம் நீங்கள்


கவிதைகள் வாசித்த குரல்:
கண்ணன்
Listen On Spotify :

About the author

கண்ணன்

கண்ணன்

சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website