cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 35 கவிதைகள்

தீபிகா நடராஜன் கவிதைகள்


யாரும் கவனிக்காத
கடைசி வரிசையில் அமரத்தான்
அவ்வளவு சிரத்யோடு அலங்கரித்துக் கொள்வேன்.

சற்றே உதட்டை சுளித்தபடி
கோணலாகிவிட்ட பொம்மையைத்தான்
தேடிப்பிடித்து வாங்கிக் கொள்வேன்.

பூனையையும் நாய்களையும் அல்ல
பன்றிக்குட்டியை தான்
கட்டிக்கொண்டு உறங்க பிடித்திருக்கிறது.

யாருடன் பிணக்கின்றி வாழமுடியுமோ
அவர்கள் வரும் வழியைத்தான்
முதலில் பூட்டிவிட முனைகிறேன்

ஏடன் தோட்டத்தின் இனிக்கும் கனிகளில் அல்ல
விலக்கப்பட்ட ஆப்பிளில் தான்
தீரும் போல இந்த பசி

*****

அப்பா பரிசளித்த
விலை உயர்ந்த கடிகாரங்கள்
இப்போது என்னிடம் இல்லை

எங்க அம்மாவும் ஆயாவும்
இதைத்தான் எனக்கு சொன்னாங்க என
அம்மா கொடுத்த அறிவுரைகள்
இப்போது இல்லை

அக்கா கொடுத்த உடைகள் இல்லை
அண்ணன் கொடுத்த சைக்கிள் இல்லை
இரண்டோ மூன்றோ
இறந்தகால காதல்கள் கொடுத்த
எதுவுமே என்னிடம் இல்லை

இவ்வளவுக்கு பிறகும்
ஒன்றுண்டு நண்பர்களே
நீங்கள் தெரிந்தும் கொடுத்திடாத
நான் விரும்பியும் தேர்தெடுக்காத
அந்த வெறுமை.


 

About the author

தீபிகா நடராஜன்

தீபிகா நடராஜன்

என் கடலுக்கு யார் சாயல், புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல் ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Biochemistry & Biotechnology துறைக்கான முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website