cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 35 கவிதைகள்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்


கிளைகளின் நுனி வரையில்..

எவரும் அறிந்திராத கானகத்தின் பாதைகளை
சொற்களில் வரைந்து வைத்திருப்பவன்
நாடோடியாக வந்தபோது
தாகமென்று சைகை செய்தான்

அள்ளியூற்றி
நீரோடு அண்ணாந்தபோது
எப்போதோ அறுபட்ட நாக்கு தடித்திருந்தது

அவன் நடக்க நடக்க பாதங்களின் அடியில்
நிலம் நெகிழ்ந்து குழைந்தது
முதலில்

மழைக்காலம் வெறித்த பொழுதில்
அப்பாதப் பள்ளங்களின்
வழிநெடுக
செடிகள் முளைத்திருந்தன

கிழக்கின் நூற்றாண்டு தேய
அவை மரங்களாயின

அம்மரங்களைப் பின்தொடர்ந்து போன சந்ததியொன்று
அதிசயித்து பாறைகளாக உறைந்தது
மெல்ல

நாற்பதாம் தலைமுறையென தடித்த வேரோடி
இட்டுச் சென்று
விட்ட
அடர்வெளியில்
புதர்களென
சொற்கள் மண்டி கிடந்தன

இன்னும் கலையாத
நவீனக் கனவின் விலா எலும்புகள் புடைத்திருக்கும்
பகல்களில்
அண்ணாந்து குடிப்பதற்கான நீரின் சலசலப்புகளற்று
சதா பாட்டில்களில் அலுங்கி
வறள்கிறது தாகம்

பெருங்காடாகி துருவேறும் முனைப்போடு
கான்க்ரீட் தளங்களெங்கும்
கம்பிகள் துருத்திடும் சொற்கள்
மண்டியிட்டு கிடக்கின்றன

உச்சரிக்க எவருமற்று

●●●

சரியெனும்படி..

ஒன்றுமே நடந்திராதபோது
கையருகே வந்தமரும்
சிறு பறவையின்
பசியை
எழுதுகிறேன்

மணித்துளிகள் விளையும் பொழுதை
தன் சிறிய அலகால் கொத்திக் கொத்தி பொத்தலிடும்
தன்முனைப்பில்
காலத்திற்கு அப்பால் விழுந்துவிடும்
துளைக்குள்ளே சிறு உடல் நுழைத்து
என்னை அழைக்கிறது

என் சிறகுகளைக் கழற்றி
இப்பழந்திண்ணையில் வைக்கிறேன்

மெல்ல மூக்கை மட்டும் நுழைக்க முடிந்த அத்துளையின்
வழியே
நுகர்கிறேன் ஓர் அழிந்த உலகை

இவ்வுலகின் இறுதி சுவாசத் துவாரத்தில்
கூடு கட்டிக்கொள்ளும் அப்பறவை
அவ்வுலகின் எல்லையிலிருந்து
கொத்தத் தொடங்குகிறது
என் பொழுதை

●●●

நீக்கமற..

இதற்கு முன்பும் பார்த்திருந்தார்கள்
அப்படி சொன்னதாகத்தான் பேச்சு
பாழுங் கிணற்றடியில்

தூது வரத் தயாராக இல்லாத மழைத்துளிகள்
கடந்து போகின்றன
அடுத்த கண்டத்திற்கு

சூரியத் தகட்டின் மெல்லிசில் வார்க்கப்பட்ட
அனல் காற்று
அலைக்கோடுகளாகி
கண்ணெட்டும் தொலைவுக்கும் அப்பால் நதியென்கிறது
ஓரங்குல அந்தரத்தில்

இதற்கு முன்பும் சொல்லியிருந்தார்கள்
அப்படி பார்த்ததாகத்தான் பேச்சு
பழைய டீக்கடையில்

அயலான் வானைக் கிழித்துப் பாய்ந்தோடும் தீயின் நாவுகள்
அந்நிய செய்தியைக் கொட்டுகின்றன
மடி நிரப்பும் பொருட்டு
சுடச் சுட

சுட சுட

முழுமையடையாத நிலவின் கிரணங்களில் திரள்கிற
இருள் விளிம்பு
எல்லைக்கோடுகளாகி
காலடியிலேயே குளம் வெட்டுகிறது விண்மீன் இளைப்பாறிட
இரண்டங்குல பள்ளத்தில்

கோபுரத்தின் பொந்துகளில் அனற்றும் பறவைகள்
விடியற்காலை அழைப்பைக் கேட்டு
பதறுவதுமில்லை
சிறகு உதறி பாய்வதுமில்லை

வைகறைச் சாம்பலை கபாலத்தில் பூசியபடி
ஆடிட விரும்பும் ஆட்டத்தை
தலைமயிர் முளைத்த மண்டையோடுகள்
வேடிக்கைப் பார்க்கின்றன

இதற்கு முன்பும்
இதற்குப் பிறகும்

●●●

முகமூடிக்குள்ளிருந்து இளித்தபடி..

உற்பத்தியின் தோள்துண்டில் உபரி நூல்கள்
பிசிராகி அசைகின்றன
வியாழந்தோறும் நிலம் விரிக்கும் சந்தையை
நிந்தித்து

க்ரூட் ஆயிலின் ஒற்றைப் பீப்பாயின் விலையைத்
தொட்டு வணங்கி
பசுஞ்சிகப்பு அம்புக்குறிகள் வில்லிலிருந்து
விடுவித்துக்கொள்ளும் வேகத்தில்
நங் என மோதுமிடம் பெட்ரோல் பங்க் மட்டுமே

லிட்டருக்குப் பல்லாயிரம் மைல் தொலைவு
மணிக்கு இத்தனை ரூபாய்
என்றபடி
வெண்ணிற பறவையின் அலுமினியச் சிறகுகள்
பூட்டிக்கொண்டு விரைவது
கார்கோவை அல்ல உலகச் சந்தையை

அட

உள்ளூரில் விலை போகாத மாடு ஒன்று
நியூ யார்க்கின் வால் ஸ்ட்ரீட்டில்
வெண்கலச் சிலையாகி நிற்கிறது
நாசி விடைக்க

நாம்
கரடி வேடம் போட்டுக்கொண்டு
கல்யாண மண்டப வாசல்களில்
குழந்தைகளுக்கு
கிச்சுகிச்சு மூட்டுவோம்

முடிந்தால் ஒரு செல்ஃபி


கவிதைகள் வாசித்த குரல்:
ரேவா
Listen On Spotify :

About the author

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ

கவிதைக்காரன் இளங்கோ என்ற பெயரில் எழுதிவரும் இவரின் இயற்பெயர் இளங்கோ. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சார்ந்தவர்.
இளங்கலை வணிகவியல் பட்டமும், முதுகலை உளவியல் பட்டமும் பெற்றுள்ளார். திரைத் தொழில்நுட்பத்தில் Cinematography பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து, திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணி புரிந்தவர்.

2019-ல் இருந்து கணையாழி கலை இலக்கியத் திங்களிதழில் துணை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். திரைத்துறையில் திரைக்கதை விவாதங்களில் Script Consultant ஆகவும் பங்காற்றுகிறார்.

Pure Cinema அமைப்பு நடத்துகின்ற Academy for Assistant Directors-ல் ‘சினிமாவில் இலக்கியத்தின் பங்கு’ என்கிற தலைப்பில் சினிமாவை கற்கும் மாணவர்களுக்கு ஒரு முழுநாள் பயிலரங்கு நடத்திக்கொடுத்திருக்கிறார்.

‘பேசுபொருளாக சிறுகதைகளை அணுகுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ’வாசகசாலை இலக்கிய அமைப்பு’ ஏற்பாடு செய்த ஒரு முழுநாள் பயிலரங்கை நடத்தியிருக்கிறார்.

இவருடைய எழுத்தில் இதுவரை படைப்புகளாக வெளிவந்திருப்பவை:

ப்ரைலியில் உறையும் நகரம் (2015), 360 டிகிரி இரவு (2019),
கோமாளிகளின் நரகம் (2019),
-என மூன்று கவிதைத் தொகுப்புகளும்

பனிக் குல்லா (2017), மோகன் (2019),
-என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும்

ஏழு பூட்டுக்கள் (2019) -என்று ஒரு நாவலும்,

திரைமொழிப் பார்வை, பாகம்-1 (2019) -என்று ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website