cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 38 கவிதைகள்

ஸ்டாலின் சரவணன் கவிதைகள்


(1)

தேநீர் போடும் பெரியவரின் கைகளை
மேலும் நடுங்கவிடும் மழை !

நவம்பர் கடைசியில்
மாநகரம்
சோம்பலை
எவ்வளவு முடியுமோ
கை நிறைய அள்ளி
உடுத்திக் கொள்கிறது

தூக்கத்தில்
எழுந்து நடப்பவர்கள் போல்
ஆமையாகின்றனர் அனைவரும்
மேட்டில் இருந்து சறுக்கும்
வண்டிகள் போல
வேகத்தை எவரும் கூட்டாமலே
தானாய் போகின்றன வாகனங்கள்

எப்போதும் விட
அளக்கும் கை
பூக்கார அக்காவுக்கு
இன்று நீளமாகிவிடுகிறது

பேருந்துக்காக காத்திருக்கும்
நடுத்தர வயது பெண் ஒருத்தி
சொட்டிக் கொண்டிருக்கும்
மழையை பார்த்தபடி இருக்கிறாள்
சட்டென
அவள் இளமையில் தொலைத்த
பாடல் ஒன்று
உதட்டோரம் வந்து விட்டது
முணுமுணுக்கத் தொடங்குகிறாள்
சொட்டிய மழை
சடசடவென கொட்ட ஆரம்பித்துவிட்டது

பள்ளி முடிந்து வீடு திரும்பும்
சிறுவன் ஓடத் தொடங்க
அவன் தலைக்கொரு
ஜவ்வு தாள்  கவரைத் தர
பின்னோடும்‌
காற்றும்
சேர்ந்து நனைந்து விட்டது

இத்தனைக்கும்  இடையே
முதல் காட்சியை
கவனிக்கத் தவறிவிட்டேன்

மாமழை செய்யும் வேலையா அது!?


(2)

அப்பா இறக்காமல் இருந்திருந்தால்
என்று ஒரு பெண் பேஸ்புக்கில் எழுதியிருந்தாள்!

அப்பா இறக்காதிருந்திருந்தால்
இந்த பூமி எத்தனை டிகிரி
சாய்வாய் சுற்றிக் கொண்டிருக்கும்

அவள் கூறத் தொடங்கினாள்
நள்ளிரவில் ஊர் திரும்பும்போதும்
எனக்கு மிகவும் பிடித்த கடை
பரோட்டா வாங்கி தந்திருப்பார்
பத்து நூறு ரூபாய்க்கு
நான் வேலை முடித்து திரும்பினாலும்
என்னை நடக்கவிடாமல்
ராணிக்கேற்ற
வண்டியில் அழைத்து வருவார்

மாதவிலக்கு நாட்களில்
சாப்பிட்ட தட்டை கூட
அவரே எடுத்துச் செல்வார்

நட்சத்திரங்கள்
கூடுதலாக இருக்கும்
வானத்தைக் காட்டாமல்
அந்நாளில்
உறங்க சென்றிருக்க மாட்டார்

அயர்ந்து தூங்கும்
பிள்ளைகளின் கன்னத்தில்
அவரின்
முத்த தடம் இல்லாத இடத்தை
தேடினாலும்
கிடைக்காது செய்திருப்பார்.

கவிதைகள் வாசித்த குரல்:
ஸ்டாலின்  சரவணன்
Listen On Spotify :

About the author

ஸ்டாலின் சரவணன்

ஸ்டாலின் சரவணன்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சார்ந்த ஸ்டாலின் சரவணன்; தற்போது புதுகோட்டை மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடத்தில் முதுநிலை பட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டமும் பெற்றவர்.

1999 ஆம் ஆண்டிலிருந்து எழுத ஆரம்பித்த இவரின் கவிதைகளும் கட்டுரைகளும், ஆனந்த விகடன், காலச்சுவடு, தடம், உயிரெழுத்து, உயிர்மை, கணையாழி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட தமுஎகச தலைவர், தமுஎகச மாநிலக் குழு உறுப்பினர், புதுக்கோட்டை சித்தன்னவாசல் இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் கள செயல்பாட்டாளராகவும் இயங்கிக்கொண்டிருக்கும் ஸ்டாலின் சரவணன் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் ஆகியன குறித்து விரிவாக உரைகள் அளிக்கும் திறன் கொண்டவர். கவிதைப் பயிலரங்குகளின் மூலம் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே நவீன கவிதைகள் பற்றிய அறிமுகத்தைத் தொடர்ந்து எடுத்துச் செல்கிறார்.

"திரையில் விரியும் இந்திய மனம்” என்ற தலைப்பில் இந்திய சினிமா குறித்த ஒரு தொடரை உயிர்மை இணையத்தளத்தில் எழுதியது பெரும் வரவேற்பை பெற்றது.

இது வரை வெளிவந்துள்ள நூல்கள் :
கவிதைத் தொகுப்பு -

தேவதைகளின் வீடு (2014, அகரம் வெளியீடு),
ஆரஞ்சு மணக்கும் பசி (2016, உயிர்மை வெளியீடு),
ரொட்டிகளை விளைவிப்பவன் (2018, உயிர்மை வெளியீடு)

பெற்றுள்ள விருதுகள் :
படைப்புக் குழும விருது- 2019,
சௌமா விருது -2019,
தோழர் சுப்பராயலு நினைவு விருது - 2019

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
இளங்குமரன்

இதம் பதம் சுகம் …..

கவிதையும் வாசிப்பும் அழகு.

You cannot copy content of this Website