cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 39 கவிதைகள்

வருணன் கவிதைகள்

வருணன்
Written by வருணன்

01

வீடு திரும்பல்

சூன்யத்துள் அலைந்து திரிந்து
அலுத்த சுடர்
விளக்கேற்றும் போதெல்லாம்
திரி நுனியில் இளைப்பாற அமருகிறது
பசலையில் தவிக்கும் சூன்யம்
காற்றைத் தூதனுப்ப
அலைந்து அலைந்து சமரசம்
இவர்களின் ஊடலுக்கிடையில்
அலைவுறுகிறோம்
நானும்
அறையும்
சகலமும்


02

அற்பப் பிறவி

மென்தூரலாய்த் துவங்கி
அடைமழையின் சாயலை
வரிந்து கொண்டபோது
ஈரமாதலுக்குத் தயங்கி
எதிரெதிராய் அண்டி நின்றிருந்த
அத்தனை கண்களும்
நிலை கொண்டது
சாவதானமாய் நனைந்து கொண்டே நடந்த வீதியோர
நாயொன்றின் மீது
இருபுறமும் அப்போது அது
வீசிய பார்வை
சீ! தூரப்போ மனுஷா
என்றது போலிருந்தது.


03

ஓவியனின் மனக்குரல்

ஓவியப் பறவைக்கு
சிறகுகள் எதற்கு அநாவசியமாய்
சிந்திக்கிறான் சர்வாதிகாரி
சிறகுகளுக்கும் சேர்த்துத் தானே
பறவையென்ற பெயர்?


04

காற்றெனும் இசைஞன்

உடைகளைத் தோரணங்களாக்கி
தானொரு சிறுவனாகி
தாவித் தாவிக் கலைத்து விளையாடுகிறது
காற்று
மீட்டப்படும் ஊளை இசையின்
தாளத்திற்குத் தப்பாமல் தவித்தலைகின்றன விரல்கள்
அதனதனை அதனதன் இடத்தில் அமர்த்திட


கவிதைகள் வாசித்த குரல்:
வருணன்
Listen On Spotify :

About the author

வருணன்

வருணன்

இயற்பெயர் லா.மா.ஜோ அந்தோணி. தூத்துக்குடியில் வசிக்கிறார். இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் இவர்; சினிமா மற்றும் இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சினிமா சார்ந்த கட்டுரைகள் படச்சுருள், வாசகசாலை இணைய இதழ், புரவி, பேசாமொழி இணைய இதழ் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதைகளும் அவ்வப்போது இணைய இதழ்களில் வெளியாகி வருகின்றன.

இவரது ‘கனவைத் துரத்தும் கலைஞன்’ என்ற சினிமா சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளின் தொகுதி வாசகசாலை பதிப்பக வெளியீடாக 2020இல் வெளிவந்துள்ளது.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
ரேவா

கவிதைகள் நாலும் நல்லாயிருக்கு.

முதலாவது கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

You cannot copy content of this Website