cropped-logo-150x150-copy.png
26%
இதழ் 40 கவிதைகள்

பிரியா பாஸ்கரன் கவிதைகள்


விடியலின் மொழி

கறுத்த இரவில்
சுழலும் சிகரம் போல
திசைமாறும் எண்ணங்கள்
மௌனத்தில் மூச்சுவிடும்
அழுகுரல்களின் ஓசை

தூசிக்குள் புதைந்து
புதுப்பிக்கும் முயற்சியாய்
ஒளியின் நீண்ட மூச்சு
கதவுக்குப் பின்னால் காத்திருக்க
விரலின் நுனியில்
வானத்தின் வாசல் திறக்கிறது

தூசிகளை ஒழித்து
புதிய காற்று நுழைய
காற்றோடு கலந்து
விதைகள் துளிர்க்கும் போது
பூமியும் வானமும்
இணைந்து நெசவாடுகிறது

மலரும் ஒரு புத்தகம்
விண்மீன் சொற்களை வாசிக்க
ஒவ்வொரு பக்கமும்
விடியலின் மொழியாக மாறுகிறது

ஒரு சிறு நம்பிக்கையின்
வேரிலிருந்து
மரமாக உயர்ந்து நிற்கிறது
வாழ்க்கை.


நவீன மிருதங்கம்

விரலின் ஓரத்தில்
ஏறிக்கூறிய சொற்கள்
பதற்றமாய் விளம்புகின்றன
செய்திகளின் சுழல்களை

வெளிச்சம் வீசும் முன்
வாயடைக்காமல் நிற்கும்
நிழல்களே இங்கே கதாபாத்திரம்
அழகின் புதிய பாதைகள்
காலம் அறியாத பாதைகளை
வரைந்து நிற்கின்றன

கண்களால் வடிவமைக்கப்படும்
சிறுகாட்சிகளின் தாகம்
ஒரு ஸ்க்ரோலில் அறை நுழைந்து
கனவுகளாய்ப் பரவுகிறது

மெய்நிகர் அலைகளில்
குழம்பிக் கிடக்கின்றன
உண்மை பொய்கள்
பண்பாட்டின் பிம்பங்கள்

நேரம் என்னவோ சந்தேகம் தான்
இளமை மின்னல் போல
ஒரு செகன்டின் புகைப்படமாய்
மாறி மறைகிறது

“நான் யார்?” என்ற கேள்வி
பின்னணியில் ஒலிக்கிறது
விரல் அதற்குப் பதிலாய்
வேறொரு திரையைத் தட்டுகிறது

இங்கே உணர்வுகள்
ஐடியோகிராம்களாய் உருக்கொண்டன
மனம் பேசுவதற்கு நேரமில்லை
வெறும் பார்வைகள் மட்டுமே
தோழமையை வரையறுக்கின்றன

நாளை நம் பின்னால்
சரித்திரம் எழுதப்படாமல்
மீம்களாய் மாறி மறந்துவிடும்

இன்றைய வாழ்க்கையின்
நவீன மிருதங்கம்
ஒரு ஸ்க்ரோலில் ஒரு திரிதல்
ஒரு திரிதலில் உலகம்.


அதிர்வொலி நிறைந்த அமைதியின் உச்சம்

நாட்கள் என்னை நழுவிக் கடக்கின்றன
காலணியின் அடியில் நசுங்கி விழுந்து
நாணலும் நம்பிக்கையும்
குருட்டுச் சிறு குருவி போலத்
திசை தெரியாமல் பறக்கின்றன

வெளிச்சம் இருக்கிறது
எப்போதும் என் எதிர்புறத்தில்
சில நேரங்களில் நிழலே துணைதான்

நகரம் முழுக்க பாசமான முகங்கள்
ஆனால்
ஒவ்வொரு முகமும்
கடவுளின் முகமல்ல
பொய்கள் அழகாகப் பேசும்
உண்மைகள் மௌனமாக நிற்கும்

“நீ வாடுகின்றாயா,
அல்லது போராடுகின்றாயா?”
எனக் கேட்பவர்களுக்குச் சொல்கிறேன்
வாடுவதும், போராடுவதும்
இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என

இப்போது
எனது நிழலும் என்னைத் துரத்துகிறது
சாமர்த்தியமாகப் புன்னகைக்கிறேன்
வெளிச்சம்
ஒரு நீண்ட கோடாக விரிந்து
என் வழியில் இறங்கும் நாளை
என்ற நம்பிக்கையில்
நான் பின்னலாக நிமிர்ந்து நிற்கிறேன்

இனி
எனது நிழல்
ஒவ்வொரு முறையும்
என்னை நிற்கச் சொல்லும் தக்கணத்தில்.


நிழல் கூட சாட்சி

நான் ஓடினேன்
அவள் ஓடினாள்
நான் நின்றேன்
அவள் நிற்கிறாள்

அழுத நாட்களில்
அவள் உற்றுப் பார்த்தாள்
சிரித்த நேரங்களில்
அவளும் சிரித்தாள்

எனக்குத் தெரியாமல்
என் பின்னால் நிற்பவள்
கடிந்தாலும் விலகாதவள்
தூக்கி நிறுத்த முடியாதவள்

இருளில் மறைகிறாள்
அதிர்ஷ்டமா?
வெளிச்சம் வந்தால்
வெளிக்குத்தான் வருகிறாள்

சில நேரம்
நான் தான் நிழலா
அவள் தான் நான் ஆகிறாளா

நினைக்க நேரமில்லை

நிஜத்தில்
அவள் என் மறந்த நேரங்களின் குரல்
நான் தப்பிக்க முடியாத சாட்சி.


 

About the author

பிரியா பாஸ்கரன்

பிரியா பாஸ்கரன்

இயற்பெயர் “பத்மப்ரியா பாஸ்கரன்”
காஞ்சிபுரம் அருகில் வெம்பாக்கம் என்ற கிராமத்தில் பிறந்த இவர் இருபத்திரண்டு வருடத்திற்கும் மேலாக மிச்சிகன் மாகாணம், வட அமெரிக்காவில் பொது நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார்

இரண்டு வருடங்களுக்கும் மேலாக கட்டுரைகள், கவிதைகள், நூல் அறிமுகம், ஆகியவற்றைத் தொடர்ந்து பல இதழ்களில் எழுதுகிறார். பல்வேறு இலக்கிய தளங்களில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், குறுந்தொகை போன்ற இலக்கியங்களைக் கதை வடிவில் குழுவாக இணைந்து நிகழ்ச்சிகளை அளித்துள்ள இவரின் படைப்புகள் இனிய உதயம், கணையாழி,
நக்கீரன், கொலுசு, படைப்பு கல்வெட்டு, படைப்பு தகவு, கதம்பம், தமிழ்ச்சாரல், வளரி, வல்லினச் சிறகுகள், தமிழ் டாக்ஸ், கொக்கரக்கோ, தாரகை, ஆக்கம், ஆனந்தசந்திரிகை, புக் டே இணையதளம், காணிநிலம், புன்னகை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. மரபுக் கவிதைகளின் மேலுள்ள ஈடுபாட்டால் வெண்பா பயிற்சிப் பட்டறை நடத்துகிறார். சேலம் தமிழ் இலக்கியப் பேரவையில் பாரதியார் விருதும், படைப்பு குழுமத்தின் சிறந்த படைப்பாளி விருதும், தமிழால் இணைவோம் உலகத் தனிழ் களத்தின் தங்கமங்கை விருதும், “காற்றின் மீதொரு நடனம்” கவிதைத் தொகுப்பிற்கு, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் வளரும் படைப்பாளி விருதும் பெற்றுள்ளார்.
கவிதைகள் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

“நினைவில் துடிக்கும் இதயம்”, “காற்றின் மீதொரு நடனம்”, “சலனமின்றி மிதக்கும் இறகு”, “The Horizon Of Proximity” , “யாம நுகர் யட்சி”, “சிறு வீ ஞாழல்” மற்றும் தமிழ் ஆர்வலர்கள் குழு வெளியீட்டில், “பால்யத்தின் சாவி” கவிதை நூலும், வல்லினச் சிறகுகள் வெளியீட்டில், “ஒரு கவிஞனும் பல கவிதைகளும்” தொகுப்பு நூல்களும் வெளியிட்டுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website