cropped-logo-150x150-copy.png
0%
Editor's Pick இதழ் 19 கவிதைகள்

இரா.பூபாலன் கவிதைகள்


  • ஆசை துறந்த புத்த முகம்

புத்த முகங்கள் அச்சிடப்பட்ட
இரவு உடையில் இருக்கிறாள் தலைவி

சமையலறை வேலைகளில் பட்டுத் தெறிக்கும்
மீன் குழம்பு
புத்தனின் முகத்தில் அறைகிறது

கழிப்பறை கணங்களில்
கண்கள் மூட முடியாமல் தன்னை
ஓர் இரவாடையில்
அச்சிட்டவனை சபிக்கிறான்

எப்போதும் கூடலின் போது
படுக்கையறை
நாட்காட்டியிலிருக்கும்
கடவுளைக் கூட
சுவருக்குத் திருப்பி வைக்கும்
வழக்கமுடைய அவள்
இரவாடையில் இருக்கும் புத்தனை மறந்துவிடுகிறாள்

திசைக்கொன்றாய் திரு திருவென
முழிக்கிறான்
ஆசைகளைத் துறந்த புத்தன்.


  • திரும்புதல் சாத்தியமற்ற பாதை

நம்பிய கதவு
அடைத்துக் கொள்கிற போது
நமது பாதைகள்
அடைத்துக் கொள்கின்றன
பறத்தலிலேயே
பிரியத்தின் இறக்கைகள்
அறுபடும் போது
தலைகுப்புற
நிலத்தில் மோதி
வீழ்கிறது மனப்பறவை திரும்பி நடக்கலாம் தான்
அன்பின் பாதையில்
திரும்புதல் சாத்தியமற்றது.


கவிதைகள் வாசித்த குரல்:
அன்பு மணிவேல்
Listen On Spotify :

 

  நுட்பம் – கவிதை இணைய இதழின் “Editor’s Pick”பகுதிக்காக கவிஞர் இரா.பூபாலன் எழுதிய “திரும்புதல் சாத்தியமற்ற பாதை” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற இந்தக் கவிதைகள் நூலாசிரியரிடம் உரிய அனுமதி பெறப்பட்டு பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.

  • திரும்புதல் சாத்தியமற்ற பாதை
  • வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
  • நூலைப் பெற : 98422 75662

About the author

இரா.பூபாலன்

இரா.பூபாலன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் பெத்தநாயக்கனூர் கிராமத்தில் பிறந்தவர். தற்போது சூலக்கல் கிராமத்தில் வசிக்கிறார். கோவையில் தனியார் நிறுவனத்தில் பணி. பொம்மைகளின் மொழி, பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு, ஆதிமுகத்தின் காலப்பிரதி, தீ நுண்மிகளின் காலம், அரூபத்தின் வாசனை, திரும்புதல் சாத்தியமற்ற பாதை, ஹோ.. என்றொரு கவிதை, நின் நெஞ்சு நேர்பவள் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

பொம்மைகளின் மொழி தொகுப்பு யூத் கிளப் இந்தியா அமைப்பின் சிறந்த இளம் எழுத்தாளர் விருதைப் பெற்றது. பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு தொகுப்புக்கு உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் சிறந்த இளம் படைப்பாளர் விருதைப் பெற்றிருக்கிறார். ஆதிமுகத்தின் காலப் பிரதி கவிதைத் தொகுப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில அளவிலான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில அளவிலான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது, நாங்கள் மூன்று இலக்கியகத்தின் சிறந்த புதுக்கவிதைக்கான விருது என விருதுகளைப் பெற்றது.

மேலும் இவர் தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் இளம் எழுத்தாளர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். பொள்ளாச்சியில் நண்பர்களுடன் இணைந்து
‘பொள்ளாச்சி இலக்கிய வட்டம்’ என்ற இலக்கிய அமைப்பைத் துவங்கி தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இலக்கிய சந்திப்புகளை ஒருங்கிணைக்கிறார்.
‘கொலுசு’ என்கிற மின்னிதழின் ஆசிரியராக இருக்கிறார். சாகித்ய அகாடெமி சார்பில் டெல்லியில் நடந்த இளம் கவிஞர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டு கவிதை வாசித்திருக்கிறார். இவரது கவிதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக்கப்பட்டிருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website