cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 8 கவிதைகள்

தேவிலிங்கம் கவிதைகள்


உன்னிடம் ஒரு தயைக்கூர்ந்த வேண்டுகோள்,
மடி அமர்ந்து,
பிடிசோறு உண்டு,
ஆடைப்பற்றி
அப்படியே உறங்கிப்போகும்
மழலை விரல் பிரித்து,
இரவில்இரயில் ஏறும் தகப்பனைப் போல் ,
என்னைத் தனியேதவிக்கவிட்டுச்
சென்றுவிடாதே,
காலையில் காரணம் சொல்லத்தெரியாமல்
வம்பிழுத்து அடிவாங்கித் தேம்பியழும் எனது குழந்தமை..!

  • பலூன் நேரம்..

அடிவாரத்தின் குடிலுக்குள்,
இருவரையும் உருக்கத்தேவையான,
ஒரு மோகத் தேநீருக்காக காத்திருந்தோம்.

எதையோ உன்னிடம் சொல்லிஅழத் தளும்பிய கண்களோடு,
உன்னிடம் திரும்புகிறது எனது கவனம்.

நீயோ,
முதல்நாள் பள்ளி வரும்குழந்தையென
வாய்திறக்க மறுக்கிறாய்!

சூரியன் மறைந்த வானத்தின்
முதல் நட்சத்திரமாய் தயங்கத் தயங்கி பேசுகிறாய்.
பிரபஞ்சத்தின் சேராத காதல்களின் கண்ணீர்
துளிகள் தான்,
திரவியம் தேடிப்போகுமுன்,
நீரோடும் பாலத்தின் மேல் நீ கொடுத்த காகிதப் பூக்கள்.
என் கன்னம் பற்றும் உனது கரங்கள்.

உன் தலைக்கோதும் எனது கரங்கள்
இறக்கும் தருவாய் ஈசலின் இறக்கைகளாய்
எழுவதும் பின்பு வீழ்வதுமாக, படபடத்துக்கொள்கின்றன.

கர்ப்பிணிப்பெண்ணாய்,
மெல்ல அடியெடுத்து
இருளுக்குள் நகர்ந்துக்கொண்டிருக்கிறது
வெயில்.

நீ உடைப்பாயா,
நான் உடைப்பேனா என,
உடையக்காத்திருக்கிறது நம்மிடையேயான பலூன் நேரம்.

நம்மிருவரையும் நோட்டமிட்டபடி சுற்றி வருகின்றன
சில பைனாக்குலர் கண்கள்.

திரும்பி வருகையில்
பிரித்தறிய முடியாத மழைநீரில்
கண்மை கரைந்தொழுகும் கண்ணீரோடு
நான் கொடுத்த முதுகு முத்தத்தின் ஈரமும்
உன் காட்டுத்தீயெனப்பரவும்
மோகத்தின் தனிமைநிமிடங்களின் எனது ஞாபத்துளிகளும்
முத்தும், மரகதங்களாக மாறட்டும் இப்பவியில்.

  • வெறுப்பு

ஆறடி உயரம்,அடங்கி அரையடி பெட்டியில்
அமர்ந்திருப்பது போன்ற அவலம்.
காணும் வெளியெல்லாம்
அமிலப்புகையால் அமிழ்ந்துவிட்டது போலொரு தோரணை.
அணிந்து கிளம்பிய காஞ்சிப்பட்டாடையில்
முந்தானை கிழிந்தொங்குமொரு வேதனை.
வாயெட்டும் கடைசிப்பருக்கை கஞ்சிசோறிலும்,
கரப்பான் பூச்சிவிழும் துயரம்.
காலம் வரும்வரை காத்திருந்து,
நம்பவைத்து
முனை மழுங்கிய கத்தியால் கழுத்தறுக்கும்
நரபலி விட கொடுமை.
சிறிது சிறிதாக சேர்த்து நான் வீழ்ந்ததும்,
காட்டுத்தீயென நீ உமிழும் வெறுப்பு.


 

About the author

தேவிலிங்கம்

தேவிலிங்கம்

வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.

பல்வேறு அச்சு / இணைய இதழ்களில் இவர் எழுதும் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. ’நெய்தல்நறுவீ’’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘கிளிச்சிறை’ எனும் சிறுகதைத் தொகுப்பை வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website