நெற்றி சுருக்கத்தில் கதையெழுதுவதுதான்
இயற்கையின் வேலை!!
நீர்படுகையிலமர்ந்து
இயற்கையை ரசிக்க வைத்துதான்
உங்கள் வயதை
இயற்கைத் தின்கிறது!!
ரசித்தலொரு
போதை தானே?
எவ்வளவு ஈடுபாட்டுடன்
துளிர்த்தத் தருணத்திலிருந்து
இலையை செதுக்கியது இயற்கை?
இந்த சிலந்தி பூச்சியைப் பாருங்கள்
வெண்ணிற எச்சிலால்
இலையைச் சுருட்டி
முட்டையிட
பயன்படுத்தி கொண்டது!
ஏ மீனே?
நீரிலிருந்து வெளியே
எட்டி குதிக்கும்
அந்த ஒரு நொடியுன் மீதிருந்து
மழை போல் சொட்டுகிற
நீர்த்துளி
நதியினுடையதுதானே?
நதியை ஏன்
ஏமாற்றி விளையாடுகிறாய்!!
பிரசவத்துக்கு முந்தைய
நாள் ஆட்டின் வயிற்றைப் போல்
நிரம்பி குலுங்குகிறது
இந்நதியின் நீரோட்டம்!!
கோந்துப் பிசினை எடுத்து
காத்தாடி ஒட்ட செல்பவனுக்கு
எப்போதும் “கம்” கண்டுபிடித்தது
தெரிந்திடவே கூடாது!!
இலைகளின் எண்ணிக்கைக்கு
ஈடாய் உதிர்ந்திருக்கும்
பச்சைக் கிளிகளின் சிறகுகள்!!
சிறகுகள் எப்போதும் பறக்கின்றன…
இலைகளோ உதிர்ந்த
பின்தான் பறக்கின்றன…
சருகுகளின் நிறம்
மறையாதபடிக்கு
சிறகுகள் கலந்திடவே
இயற்கையிந்த
ஏற்பாட்டை செய்ததோ?
பிரியாவிடை கொடு மரமே!!
இலைகள் பறந்து போகட்டும்…
சிறகுகளோடு!!
உலகெங்கும் இலைகள்
கொட்டி நிரம்பி கிடக்கின்றன!!
வெவ்வேறு மரங்களின்
வெவ்வேறு இலைகள்
எங்கும் நிறைந்து கிடக்கின்றன!!
மஞ்சள் பழுப்பு ஊதா பச்சை என
வெவ்வேறு நிறங்களைக்
கொண்ட இலைகள்
விழுந்த படியே இருக்கின்றன!!
என்றோ ஒரு நாள் மரமும் வீழும்!!
ஆனால்!!
ஒரு போதும் மரத்தால்
இலை போல் விழ முடியாது!!
Line Art Courtesy : Ink and Drop