cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

கவிஜி கவிதைகள்

கவிஜி
Written by கவிஜி

அனுபூதி

விழும் முன் இருந்த
விதியை நினைக்க கூடும்
விடுபடுதலின் வியாக்யானம்
வெற்றிடம் நிரம்ப புரியலாம்
நிலம் படும் முன்
நித்திரை சூழ்ந்திட கூடாது
பெருங்காற்று
இப்போதைக்கு வேண்டாம்
சிறுபிள்ளை கைகள்
தூரங்கள் காக்கட்டும்
கவிஞன் எவனும் கபளீகரம்
செய்திடா கருணை அவசியம்
மண் தொடுதல் பற்றி
மறந்து விடுதல் நலம்
பண்படுதல் பற்றி தவம்
இயற்றும் நேரம்
நம்புகிறேன்
அலைக்கழிப்பில்
அனுபூதி அடைகிறது இலை

சித்திரம் நகர்கிறது

நெடுந்தூர பயணத்தில் சாலையோர
பச்சை வண்ண ஹோட்டலில்
தேனீர் அருந்துகிறேன்
பசிக்கிறதா இல்லையா
என்பது பற்றி சொல்வதற்கில்லை
தேவாவின் 90கள் ஸ்பீக்கரில்
கானா வாசிக்கின்றன
நெடுஞ்சாலை இடதும் வலதுமென
றெக்கை கட்டி இருக்கிறது
ஓய்வில்லாத உலகம் செவ்வகம் தான் போல
உலக சக்கரத்தை மீண்டும்
உருட்ட ஆரம்பிக்கும் ஓட்டுநர்
ஒலி எழுப்பி ஓலை அனுப்புகிறார்
ஓடிச் சென்று ஜன்னல் அடைகிறேன்
என்னைப் போலவே
தேநீருக்கு பிறகு ஓடோடி வந்து
பேருந்தில் ஏறும் யாரோ நீ
இந்த மென் இரவில்
சுடர் ஏந்தியது போல
மனச்சூட்டில் ஏனோ இனி
தூக்கம் வரலாம் எனக்கு
தூக்கம் வராத
அந்த சிற்றூர் சாலைவாசிக்கு
சித்திரம் நகர்வதாக படலாம்
இனி இந்த பேருந்து…!

தவளை முதுகில் சிந்தனை

முயலுக்கு மூன்று கால்
இல்லையில்லை ரெண்டரை என
சொல்ல வேண்டும்

காதுகளை எதற்காகவும் திறவா
வாய் மட்டும் செத்தும்
திறந்து கிடக்கும்

கேள்வி கேட்டு பதிலும் சொல்லி
கேட்ட கேள்வி விட்டு
சொல்லும் பதிலும் விட்டு
தவளை முதுகில் தான் சிந்தனை

உண்மையில் கவனமற்ற சிரிப்பெல்லாம்
உண்மையில் நூல் அறுந்த பட்டம்
வானில் தெரியும் வரை கவர்ச்சி
பிறகு சிக்கி சின்னாபின்னமாகி விடும்

கவிதை மனதுக்கும் கலங்கிய மனதுக்கும்
நூல் தான் இடைவெளி
மற்றும் தன்னை மட்டுமே
இவ்வுலகம் தூக்கி சுற்றவில்லை

ஜய்ஞ்சக்கா போடுவோர் மேலிருக்கும்
ஈர்ப்புக்கு ஒருபோதும் விடிவில்லையெனில்
தலையில் நடக்கிறாய்
கால்களில் சிந்திக்கிறாய்

திறவாத கதவு

ஒன்று பட்டும் படாமல் பேசுகிறீர்கள்
அல்லது பேசாமல் விடுகிறீர்கள்
மறைந்து பார்க்கிறீர்கள்
அல்லது
மறைக்க பார்க்கிறீர்கள்
இருப்பதை இல்லையென்பது
கடினமென அறிந்ததும்
இல்லாததை இருப்பதாக்கிக்
கொள்கிறீர்கள்
போலிகளின் முகப்பூச்சுக்கு
எத்தனை காலம்தான்
கண்ணாடி பிடிப்பது
பின்னிருந்து வருகிறவன்
பின்னாலேயே வர வேண்டுவது
குதர்க்கம் தானே
சிந்தனையின் வழியே
விடிவுக்கு நகர்வதை
வேடிக்கையாவது பார்க்கலாம்
பொருட்டில்லை என்பது போல
பாவிக்கிறீர்கள்
வேறு வழியில்லை
திறவாத கதவு உடையும் வரை
எட்டி உதைக்க
தயங்குவதில்லை யாம்…

மனமே நீ ஒரு மாய மான்

உன் வசீகரம் எதுவென
நினைத்துக் கொண்டிருக்கிறாய்
எதற்கு அடுக்கடுக்கான வேஷங்கள்
ஏன் தலையுமற்ற வாலுமற்ற தடுமாற்றம்
கற்பனை வேறு hallucination வேறு
புரிகிறதா
உன்னிலிருந்தே மற்றவர் உலகமும்
சுழல வேண்டும் என்பது பிழையிலும் பிழை
இறந்தவன் வீட்டிலும் நீயே
மாலையிட்டுக் கொள்வது முறைதானோ
வானவில்லில் தொற்றித் திரியும் உன்னை
யார் தான் காப்பாற்றுவார்கள்
வஞ்சம் நிறைந்த புன்னகையில்
வாழ்வு குறைகிறது பார்
ஓயாமல் உளறிக் கொண்டே இருப்பதில்
என்ன கண்டு பிடித்தாய்
தாங்கொணா அயற்சிகளை
சொற்களின் இடுக்கில் கொண்டிருப்பது
அநியாயம் அறி
மனமே
உன்னில் சுற்றித் திரியும் ஆயிரம்
நான்களையும் கவனி
அத்தனையிலும் excentric ego.


Courtesy :  Art: Noel Badges Pugh instagram.com/hallucination.page

About the author

கவிஜி

கவிஜி

கவிஜி கோவைச் சார்ந்தவர் B.com. MBA, PG Dip in Advertising ஆகிய கல்வித் தகுதியுடன் கோவையிலுள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் மனித வள மேலதிகாரியாக பணி புரிந்து வருகிறார். ”பிழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. வாழ்வதில்தான் எனக்கு விருப்பம். அவைகள் எழுதுவதால் எனக்கு கிடைக்கிறது.” என கூறும் கவிஜியின் இயற்பெயர் விஜயகுமார்.
4000-க்கும் மேற்பட்ட கவிதைகள். 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் 50-க்கும் மேற்பட்ட குறுங்கதைகளோடு மூன்று நாவல்களையும் மூன்று திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்கள் எழுதி இருக்கிறார். குறும்பட இயக்குநராகவும் செயல்பட்டு இதுவரை 12 குறும்படங்களையும் எடுத்திருக்கும் கவிஜி பன்முகத் திறன் வாய்ந்த படைப்பாளியாக மிளிர்கிறார்.
|
ஆனந்த விகடன், குமுதம், பாக்யா, கல்கி, தாமரை, கணையாழி, ஜன்னல், காக்கை சிறகினிலே, தினை, புதுப்புனல், மாலைமதி, காமதேனு, இனிய உதயம், அச்சாரம், அத்திப்பூ, காற்றுவெளி உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் பல மின்னிதழ், இணைய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளியாகி உள்ளன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து பலவேறு இலக்கிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website