என் அம்மம்மாவையும்
அவரது செட்டுக்களையும் மாடல்கள் ஆக்கி
நானும் என் நண்பிகளும்
நடித்த ஒரு விளையாட்டு நாடகம் அது.
அவர்களுக்கு வெற்றிலைப் பெட்டி.
எங்களுக்கு டிபன் பாக்ஸ்.
அவர்களுக்கு சாப்பாட்டிற்குப் பின் வெற்றிலை.
எங்களுக்கு சாப்பாட்டிலேயே வெற்றிலை.
மெது மெது தோசை வெற்றிலையில்
கூடவே
பாசிப்பயறு பாக்கு வைச்சு,
தேங்காய்ச் சம்பல் சுண்ணாம்பு தடவி,
எடுத்து மடிச்சு ஆளுக்கொரு வாய் போட்டுக் கொள்வோம்.
ஒரு நாள் கூட வாய் சிவப்பானதும் இல்ல.
அதுக்காக நாங்க வெற்றிலை போடாம விட்டதும் இல்ல.
எங்களுக்கும் எச்சில் ஊறும்.
ஆனால் வெளியே துப்ப மாட்டோம்.
உள்ளேயே விழுங்கிக் கொள்ளுவோம்.
இப்பவும் நண்பிகள் இருக்குறாங்க.
டிபன் பாக்ஸும் இருக்கு.
ஆனால்
” சாண்ட்விச் ” வச்ச டிபன் பாக்ஸ்.
அதில் எச்சில் ஊறுவதே இல்லை.
ஆனாலும் துப்பிக் கொள்ளவே நினைக்கிறது
என் மனம்.
சஞ்ஜிகா
நினைவுகளை மீட்டும் உணர்வுள்ள வரிகள். வாழியப் பல்லாண்டு.
வித்யாசாகர்
குவைத்