ஒரு கோப்பை தேநீரின்
ஒவ்வொரு துளியிலும்
நிரம்பி வழியும்
நின் நினைவுகள் ஏனோ…
இறுதி சொட்டில் மட்டும்
ஈரம் காயாமல் பிசுபிசுக்கிறது…
அது ஏனோ தெரியவில்லை
இப்போதெல்லாம்
உன்னை பற்றிய நினைவுகள்
தன்னிலை மறந்து தலைதூக்குகிறது..
ஆம்…
உந்தன் பின்னங்கழுத்தை
இறுக்கக் கட்டிக்கொண்டு
காதுமடல் கடித்து
காதலிக்க தூண்டுகிறது..
உந்தன் விரல்களோடு
விரல்களை பின்னிக்கொண்டு
உள்ளங்கை சூட்டில்
உலகம் மறக்க சொல்கிறது..
உந்தன் மடி சாய்ந்து
மழலையென
மயங்கி கிடந்திட கெஞ்சுகிறது..
உந்தன் காதுமடல் மெல்ல வருடி
இரகசியங்கள் பலவற்றை
பக்குவமாய் கதைத்திட
பாவமாய் பரிதவிக்கிறது..
இன்னும் என்னென்னவோ
உணர்வுகளை
உருக்குலையாமல்
உன்னிடம் சேர்த்திடவே
உருகி தவித்து
பிசுபிசுத்துக் கிடக்கிறது
ஈரம் காயாத அந்த
இறுதி சொட்டு தேநீர்…
அருமையான கவிதை