- குழந்தைகளின் வானம்
குழந்தைகளின் வானத்தில்
சந்தோச விண்மீன்கள்
புதிதாய் முளைத்தன..
கேக்குகள் வரவழைக்கப்பட்டன
பலூன்கள் ஊதப்பட்டன
மின்மினித் துகள்களை
முகங்களில் அப்பிக் குழந்தைகள்
மகிழ்ந்தனர்
புதிய பாடலொன்றை
உதடுகளில் உமிழ்ந்தபடி
சிறுவர்களின் கால்கள்
குதூகலிக்கத் தொடங்கின…
அன்றைய பகலில்
பரிசுகளாலும்
பட்சணங்களாலும்
நிரம்பிவழிந்தன
குழந்தைகளின் சட்டைப்பைகள்
மாலையில்
வெறிச்சோடிப்போயிற்று
அவர்களின் வானம்
பலூன்கள் அனைத்தும் வெடித்து
முடிந்தன
கேக்குகள் அனைத்தும் தீர்ந்து போயின
விடைபெற்றுக் கொண்டன
கனவுகள் அனைத்தும்
குழந்தைகள்…?
- அற்புதமற்றவனின் டயரி
நண்பா !
உனக்கென்ன
கொஸ்ரலை விட்டு
வீட்டுக்கு போனால்
நல்ல கறியும்
பிரியாணிச் சோறும்
உண்பதற்கு கிடைக்குமென்று
குதூகலித்து கொள்கிறாய்..
உனது வரவை
பண்டிகையைப் போல்
வரவேற்கவும்
பலகாரம் சுட்டு அமுதூட்டவும்
ஆயிரம் உறவுகள்
காத்திருக்குமாம்.
தங்கள் ராஜகுமாரனை
மாளிகைக்கு
அழைத்து போவதற்காய்
நாளை காத்திருக்குமாம்
பல்சர் வண்டிகள்..
ஆயினும் நண்பா !
எனது வரவு
அப்பிடியொன்றும்
அற்புதமானதல்ல
அவர்களுக்கு..
அன்றைய மதிய உலையில்
அரைப் படி அரிசி
அதிகமாய்க் கொதிக்கும்
அவ்வளவுதான்..