cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 19 கவிதைகள்

சாய்வைஷ்ணவி கவிதைகள்


ன் காத்திருப்பை விலக்கிவிட்டு
நீ முத்தமிடுவதை பற்றி பேசுகிறாய்
மிடறு மிடறாய் பருகிய ஆகிருதியை
ஒளியென உமிழும் உன் சொற்கள்
நாமற்ற இவ்வெளியை
இருளாகவே அடைகிறது
அதன் மீச்சிறு நட்சத்திரங்கள்
என்னுடல் மேவும் விரல்கள்
சல்லாபத்தில் படரும்
தேர்க்கொடியென
இருப்பை தகர்த்து
பட்டருந்து போகும்
இத்தேகத்தில் தான்
மனமென்றொன்று
முன்பு வாழ்ந்திருந்தது.

விருந்திற்கு அழைக்க வருகிறார்கள்
அவர்களுக்கென முற்றத்தில்
புதிதாக அறையொன்று செதுக்கி வைத்திருக்கிறேன்
அதில் கரையான் புற்றைப்போல நாற்காலியும்
கோப்பை வைத்தெடுக்க டீபாயும் நட்டுவிட்டேன்
என்றுமே ஆறாத தேநீரோடு கொஞ்சம் இனிப்புகளையும்
தயாரித்து பீங்கான் தட்டுகளை அலங்கரித்திருக்கிறேன்
மெல்லிய மஞ்சள் விளக்கொளியும்
ஓயாமல் இசைக்கும் ஜாஸும்
தத்தம் வேலையை தொடங்கிவிட்டன
இனி அவர்கள் வரும் பாதையின் முட்களைத்தான் அகற்றவேண்டும்

முதிராதக் கருக்கலைத்து
அடுத்த சுழற்சிக்காய்
காத்திருக்கிறாள் அக்கா
செடிகளற்ற வெற்றுத் தொட்டிகளைச்
சாலையோரத்து முட்செடிகளால்
நிரப்ப அவளுக்கெப்படி
தோன்றியிருக்கும்?


கவிதைகள் வாசித்த குரல்:
சாய்வைஷ்ணவி
Listen On Spotify :

About the author

சாய் வைஷ்ணவி

சாய் வைஷ்ணவி

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிறந்த சாய்வைஷ்ணவி திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உயிர்தொழில் நுட்பவியலில் பட்டப்படிப்பு முடித்தவர். திருச்சி, சென்னை, பெங்களூரு பெருநகரங்களின் மேநாட்டு நிறுவனங்களில் மெடிக்கல் கோடிங் துறையில் பணிபுரிந்தவர். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக முழுநேர குடும்பத் தலைவியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின், புத்தகங்கள் படித்தும் அதற்கு விமர்சனங்கள் எழுதி முகநூலில் பதிவிட்டும் வருகிறார்.

பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளியாகி உள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “வலசை போகும் விமானங்கள் “ (கடல் பதிப்பகம் வெளியீடு)

தமிழ்நாடு கலை இலக்கிய முற்போக்கு மேடை விருது மற்றும் புன்னகை இலக்கிய அமைப்பின் “புன்னகை விருது” உள்ளிட்ட விருதுகளை “வலசை போகும் விமானங்கள்” கவிதைத் தொகுப்பிற்காக பெற்றுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website