அலை
நெல்லளைந்து போன
அழகிய கால்கள்
சிறு மலைக்குன்றின்
வடிவொன்றில்
ஏறிச்செல்கிறது
சலனங்களின் மொத்த
கணங்கள்,
நிலம் அசையாது
காண்கிறது
நிற்கும் ஒரு மரம்
இலையுதிர்க்காது
அசைய
முயற்சிக்கிறது
மீண்டும் மீண்டும்
மீன்கள் தீண்டாத
அழுக்காக
கரையொதுங்குகிறது
அரங்கம்,
நடனமாடியபடி
ஆடலின் ஒரு துளியை
எங்கெங்கிலும் தெளிக்கிறது.
ஏகம்
ஒற்றைத்தட முடிவில்
வாணவேடிக்கை
ஒரு பூமரம்.
எதிர்த்துப் போனபோது
படமெடுத்து நின்ற
நாக நதி.
பிரியும் இருளின்
ஆணிவேர் தெரிய
ஒளிரும் அந்தரம்.
கலைந்தாடும் விரிசடையில்
சிதறாது உறைந்த
ஒற்றை பிறை.
உச்சியிலறைந்து
அழுத்திப் பிடித்து
இருமை களைந்த வெயில்.
ஒரு குமிழி நீடிப்பதில்
விடுதலையான
மூச்சுக்காற்று.
அழகிய மலரின் அழகை
எப்போதும் மூடிவைத்த
என் விழிகள்.
கிழித்தெறிந்த
காகிதத்திலிருந்து
ஒரு வார்த்தை
காற்றினில்
பறக்கிறது
வானை அளவெடுத்து
வரும் பறவையைப் போல
சட்டென
ஞாபகத்தில்
வந்தமர்கிறது
அதன் வேர்ச்சொல்
அது
கிளை பரப்பும்
திசைகளத்தனைக்கும்
இடமளிக்கிறது
ஆகாயம்
தரையெல்லாம்
உதிர்ந்து கிடக்கிறது
திசைகளின் வாசனைகள்.
ஜன்னலுக்கு வெளியே
தூரத்தில் நகர்ந்து போகும்
அத்தனையும்
மௌனமாகவே
செல்கின்றன
திரும்பப் பெறாமல்
போவதில்லை
அத்தனை வேகத்திலும்
இந்தப் பயணம்
ஓரிரு குழந்தைகளின்
கையசைவை
தரிசிக்கையில்
அம்மௌனம்
அதே வழியில்
வெளியேறிக் கொண்டிருந்தது..
Art Courtesy : directoryofillustration.com