cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 21 கவிதைகள்

காதல் : சில குறிப்புகள்


காதல் குறித்து நிறைய சந்தேகங்கள் இருந்தன எனக்கு
அப்படி ஒன்று இருக்கிறதா என்பது அதில் முதலாவது.

***

காதல் மீது வெகு தாமதமாகவே ஆர்வம் பிறந்ததெனக்கு
கண்களை இழந்தபின் ஓவியத்தின் மீது ஆர்வம் தோன்றுவதைப் போல,
காதலை வெகு சிரமத்திற்குப் பின்னே நான் வசப்படுத்தினேன்
கண்களை இழந்தபின்பு தேர்ந்த சிற்பியாகும் ஒரு பித்தனைப்போல

***

காதல் சார்ந்த எனது விருப்பம் மிக எளிதாக இருந்தது
ஒரே ஒரு கவிதை என்பதாக
காதல் சார்ந்த எனது விருப்பம் மிகச் சிரமமானதாக இருந்தது
எனக்கான ஒரு கவிதை என்பதாக

****

நான் நிறைய நிறையக் காதல்கள் செய்தேன்
உங்கள் விரல்களின் எண்ணிக்கைக்கு நிகராக,
அல்லது
அதை விட அதிகமாக
ஒரு அலைபோல் எனைச் சுருட்டி மீண்டும் கரையிலேயே துப்பிய ஒரு காதல்
தரை பிளந்து நான் நழுவிய போது கரம் நீட்டி மீட்ட ஒரு காதல்
சிறிய நாய்க்குட்டி போல் கால்களுக்கிடையே முட்டி முட்டி முனகும் ஒரு காதல்
தனித்த பாறைமேல் அமர்கையில் எல்லாம் சட்டெனக் காட்சிதரும்
ப்ரத்யேக வானவில் போன்றதொரு காதல்
அம்பறாத் தூணி முழுக்க கவிதை நிரப்பிக் கொணர்ந்த ஒரு காதல்

****

திகட்டத்திகட்டக் காதலித்ததில் எனக்குப் பல தெளிவுகள் பிறந்தன
எல்லாக் காதல்களிலும் நான் இருந்தேன் என்பதும்,
சில காதல்களில் நான் மட்டுமே இருந்தேன் என்பதும்
அதில் இறுதியானது


 

About the author

இல. சுபத்ரா

இல. சுபத்ரா

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் இல. சுபத்ரா; திருப்பூரில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

அமிதபா பக்சியின் 'பாதி இரவு கடந்துவிட்டது' நாவல் மொழிபெயர்ப்பு, 'அது உனது ரகசியம் மட்டுமல்ல' சிறுகதைகள் தொகுப்பு மொழிபெயர்ப்பு மற்றும் அனா பர்னஸ்ஸின் ‘ஆயன்’ நாவல் மொழிபெயர்ப்பு என மூன்று நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளன. . பல்வேறு இணைய இதழ்களிலும் புனைவு அபுனைவு இருவகைமைகளிலும் மொழிபெயர்த்து வருகிறார்.

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
ASHOKKUMAR P

அருமை…

Malmarugan

Awesome ..அழகு

You cannot copy content of this Website